24 special

காவல்துறை அதிரடி..! கைதான நீதிபதியின் மகள்..!

Sippy sidhu
Sippy sidhu

சண்டிகர் : தேசிய அளவிலான துப்பாக்கி சூட்டு வீரர் மற்றும் கார்ப்பரேட் வழக்கறிஞராக இருந்த சிப்பி சித்து என்கிற சுக்மான்ப்ரீத் கடந்த 2015ல் சுட்டுக்கொல்லப்பட்டார். 2016 முதல் நடந்த இந்த வழக்கில் நேற்று நீதிமன்றம் நீதிபதி ஒருவரின் மகளை குற்றவாளியாக அறிவித்திருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.


கடந்த 2015 செப்டம்பர்  15 அன்று சண்டிகார் செக்டர் 27 ல் அமைந்துள்ள பூங்கா ஒன்றில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் சிப்பி சித்து சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இவருக்கு இறந்தபோது வயது 35. இவர் பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் வசித்துவந்தார். மேலும் இவர் ஹரியானா மாநில உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியான எஸ்.எஸ் சிந்துவின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

2015 முதல் சண்டிகார் காவல்துறை இந்த வழக்கை விசாரித்துவந்தது. அரசியல் தலையீடு காரணமாக வழக்கு திசைமாற்றப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து 2016ல் வழக்கு சிபிஐ வசம் சென்றது. சிபிஐயின் முதற்கட்ட விசாரணையில் சிப்பி சிந்துவின் கொலையில் ஒரு பெண் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரியவந்தது. இருந்தபோதிலும் போதிய ஆதாரங்களை சேகரிக்க ஆரம்பித்தது.

செப்டம்பர் 2016ல் சிப்பி சித்து கொலைவழக்கில் துப்பு கொடுப்பவர்களுக்கு ஐந்து லட்சம் ரொக்கப்பரிசு என சிபிஐ அறிவித்திருந்தது. மேலும் சிபிஐ ஒரு நாளிதழில் விளம்பரம் செய்திருந்தது. அதில் " சிப்பி சித்து கொலைசெய்யப்பட்டபோது ஒரு பெண் உடனிருந்துள்ளார். அந்த பெண் தாமாக முன்வந்து எங்களை தொடர்பு கொள்ள இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. 

அப்படி தவறும் பட்சத்தில் அந்த கொலைக்குற்றத்தில் அவருக்கும் பங்கு இருந்ததாக கருதப்படும்" என அந்த விளம்பரத்தில் கூறப்பட்டிருந்தது. இருந்தாலும் வழக்கு இழுத்துக்கொண்டே சென்றது 2021ல் துப்புக்கொடுப்பவர்களுக்கு 10 லட்சம் என அறிவித்தது சிபிஐ. இதைத்தொடர்ந்து சிபிஐ தனது விசாரணை வளையத்தை விரிவாக்கியது.

விசாரணையில் அந்த பெண் யாரென்ற துப்பு துலங்கியது. அது சிபிஐக்கே பேரதிர்ச்சியாக இருந்தது. இமாச்சலப்பிரதேச உயர்நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாக உள்ள சபீனா என்பவரின் மகளான கல்யாணி சிங் என்பவரை நேற்று சிபிஐ கைதுசெய்துள்ளது. மேலும் அவர் சிறப்பு  நீதிமன்ற நீதிபதி சுக்தேவ் சிங் முன் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி கல்யாணி சிங்கை நான்குநாள் சிபிஐ காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.