24 special

தமிழகத்தில் கனிம வளத்திற்கு தனி அமைச்சகத்தை ஏற்படுத்த வேண்டும்- அண்ணாமலை!

mk stalin, annamalai
mk stalin, annamalai

தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சகத்தை நீக்கிவிட்டு, சுரங்கத்துறை, கனிமவளத்திற்கு அமைச்சகத்தை அமைக்க வேண்டும் என்று அண்ணாமலை நடைப்பயணத்தில் சூளுரைத்தார். மேலும் திமுக வாக்குறுதி நிறைவேற்றி விட்டதாக பொய் கூறுகிறார்கள் என்று சாடினார்.'என் மண் என் மக்கள்' என்ற பாதயாத்திரை பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தொடங்கி நடைப்பயணத்தை பெருகொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக நேற்று சேலம் மாவட்டம் சங்ககிரி தொகுதியில் நடைப்பயணத்தை மேற்கொண்டு பொது மேடையில் பேசினார். 


தமிழகம் முழுவதும், முறைகேடாக கனிம வளங்கள் கடத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது. அதில் சங்ககிரியும் விதிவிலக்கல்ல. 20 ஆண்டுகளில் சுமார் ரூபாய் 1.1 லட்சம் கோடி அளவுக்கு கனிமவள முறைகேடு நடந்திருப்பதாக சகாயம் அவர்கள் அறிக்கை சொன்னது. TAMIN அரசு நிறுவனமும் இந்த முறைகேடுகளுக்கு துணை போனதாகவும் சகாயம் அவர்கள் தெரிவித்திருந்தார். ஆனால் அந்த முறைகேடுகள் தொடர்பான தகவல்கள் என்ன ஆனது என்பது மர்மமாக உள்ளது. அமைச்சர் பொன்முடி தான் 2007 முதல் 2011 வரை தமிழக அரசின் சுரங்கத் துறை அமைச்சராக இருந்தார்.

அவர் மீதும் செம்மண் கடத்திய வழக்கு நிலுவையில் உள்ளது.தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையை நீக்கிவிட்டு கனிம வளம், சுங்கத்துறைக்கு தனி அமைச்சகத்தை கொண்டு வர வேண்டும். சங்ககிரி மலையை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும். இங்குள்ள பெருமாள் கோவில், வரதராஜ பெருமணல் கோவில்களில் நூறு ஆண்டுகளுக்கு மேல் குடமுழுக்கு விழா நடைபெறாமல் இருக்கிறத. அதனை இந்து அறநிலையத்துறை கண்டு கொள்ளவேண்டும் என்றும் சேலம் மாவட்டத்தில் மட்டும் எண்ணற்ற திட்டங்களை மத்திய அரசு செய்துள்ளது என்றார்.

2021 தேர்தலின்போது, திமுக கொடுத்த 500க்கும் அதிகமான தேர்தல் வாக்குறுதிகளில், 99% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக, முதலமைச்சர் ஸ்டாலின் பொய் கூறியிருக்கிறார். உதாரணமாக சங்ககிரியில் ஆட்டோ நகரம் உருவாக்கப்படும் என்ற வாக்குறுதியைக் கூட நிறைவேற்றவில்லை. இப்படி ஒவ்வொரு ஊருக்கும் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளின் ஒன்றைக் கூட நிறைவேற்றாமல், எப்படி 99% வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என்று கூசாமல் பொய் சொல்லித் திரிகிறார் ஸ்டாலின்?மகளிருக்கு 1000 கொடுப்பது போல் இந்த பக்கம் கொடுத்துவிட்டு அந்த பக்கம் ஆவினில் உள்ள பொருட்களின் விலையை உயர்த்திவிட்டனர். மின்சார கட்டணம் 15 முதல் 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. சொத்துவரி 50 சதவீத உயர்வு.

பத்திரப்பதிவு கட்டணம் 60 முதல் 500 சதவீதம் உயர்த்தியுள்ளனர். மக்கள் அனைவருக்கும் விலை உயர்வு பொருந்தும். ஆனால், உரிமைத் தொகை வழங்க மட்டும் தகுதி வேண்டுமாம். திமுகவில் உறுப்பினராக இருப்பதுதான் தகுதியா? இதுதான் உங்கள் சாதனையா? என்று சரமாரியாக திமுகவிற்கு கேள்வி எழுப்பினார்.மக்களுக்காக மத்திய அரசு கொண்டு வரும் பணிகளை எல்லாம் திமுக தாமதப்படுத்தி அரசியல் செய்து கொண்டிருக்கிறது. வரும் பாராளுமன்ற தேர்தலில், இந்த மக்கள் விரோத திமுகவை முழுவதுமாகப் புறக்கணிப்போம். மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சி தொடர, தமிழகம் முழுவதும் பாஜக கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்போம்." என்று பேசினார்.