
திருமலா பால் நிறுவனத்தில் ரூ.40 கோடி கையாடல் விவகாரத்தில் சிக்கிய மேலாளர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம் வையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன் பொலினேனி(37). திருமணமாகி குடும்பத்துடன் சென்னை புழல் அடுத்த பிரிட்டானியா நகர், முதல் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இவர் சென்னையில் உள்ள திருமலா பால் நிறுவனத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளாக கருவூல மேலாளராகப் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், அண்மையில் திருமலா பால் நிறுவனம் அவர்களது நிறுவன வரவு-செலவு கணக்குகளை சரிபார்த்து தணிக்கை செய்துள்ளது. அப்போது, ரூ.40 கோடி முறைகேடு நடைபெற்றிருப்பது தெரியவந்தது. நவீன் அந்த பணத்தை கையாடல் செய்ததாகவும், அந்த பணத்தை அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பரின் வங்கி கணக்குக்கு மாற்றி மோசடியில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இதுதொடர்பாக அந்நிறுவனம் சார்பில் கடந்த மாதம் 25-ம் தேதி கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையர் பாண்டியராஜனிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸார் நவீனை, நேரில் வரும்படி கூறி போனில் அழைத்து விசாரித்ததாகவும், அப்போது, ‘பணத்தை திருப்பி கொடுத்து விடுகிறேன். என் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம்’ என போலீஸாரிடம் நவீன் கெஞ்சி கேட்டு கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, அவர் வீட்டருகே உள்ள குடிசையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடமாகக் கிடந்தார். தகவல் அறிந்து புழல் போலீஸார் சம்பவ இடம் சென்று, நவீன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீஸாரின் விசாரணைக்கு பயந்து நவீன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் அவரை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டனரா? என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, நவீனின் குடும்பத்தினர் கூறும்போது, ‘‘நேற்று முன்தினம் நவீனை பார்க்க அவருடன் பணிபுரிந்த ஊழியர்கள் இருவர் வந்தனர். பணத்தை திருப்பி கொடுத்து விட்டால் மட்டும் சும்மா விட்டுவிடு வோம் என நினைக்க வேண்டாம். உன்னை எப்படியும் சிறையில் தள்ளி விடுவோம் என்று மிரட்டினர். அதேபோல், போலீஸாரும் கடும் நெருக்கடி கொடுத்ததால் நவீன் இந்த முடிவை எடுத்திருக்கலாம்’’ என குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருமலாபால் நிறுவனத்தில் பணம்கையாடல் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு, கொளத்தூர் துணை ஆணையர் பாண்டியராஜனால் சட்டவிரோதமாக விசாரிக்கப்பட்டு வந்த திருமலா நிறுவனத்தின் மேலாளர் நவீன் தற்கொலை செய்து கொண்டதாக வெளிவரும் அதிர்ச்சி செய்திகள், நம்பும் படியாக இல்லை. அவரது மரணம் குறித்த முறையான விசாரணை நடைபெறுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.
பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது: திருமலா பால் நிறுவனத்தின் கருவூல மேலாளராக பணியாற்றி வந்த நவீன் என்பவர், அந்த நிறுவனத்தில் பணம் கையாடல் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, சென்னை கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையர் பாண்டியராஜன் விசாரித்து வந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
திருப்புவனம் இளைஞர் அஜித்குமார், காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்ட துயர சம்பவத்தின் வடுமறையும் முன்பே, மீண்டும் காவல்துறை சட்டத்தை மீறிசெயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்றால், உண்மையில் காவல்துறை, முதல்வர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதே உண்மை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.