24 special

சர்ச்சையை கிளப்பினாரா பிஜேபி தேசிய பொதுச்செயலாளர்..? வரிந்துகட்டும் எதிர்க்கட்சிகள்..!


இந்தூர் : மத்திய அரசின் திட்டங்கள் மசோதாக்கள் ஏதேனும் மக்களை பாதிக்கும் பட்சத்தில் அதன் குறைகளை கண்ணியமான முறையில் எடுத்துக்கூறுவது ஊடகங்கள் பத்திரிக்கைகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் ஜனநாயக கடமை. ஆனால் மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களை கண்ணை மூடிக்கொண்டு எதிர்ப்பதும் ஆளும்கட்சியினர் கூறும் கருத்துக்களை சர்ச்சையாக்குவதில் மட்டுமே ஊடகங்களும் எதிர்க்கட்சிகளும் கங்கணம் கட்டிக்கொண்டு அலைகின்றன என முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்த்திப்பில் கலந்துகொண்ட பிஜேபி தேசிய பொதுச்செயலாளர் விஜயவர்ஹியா அக்னிபாத் திட்டத்தினால் கிடைக்கும் நன்மைகள் பற்றி எடுத்துரைத்தார். மேலும் எந்தெந்த பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்பது குறித்தும் தெளிவாக விளக்கினார்.

அவர் கூறிய கருத்துக்களின் ஒருபகுதியை மட்டும் எதிர்க்கட்சிகள் பிடித்துக்கொண்டு சர்ச்சையை கிளப்பிவருவதாக பிஜேபி தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். விஜயவர்ஹியா பேசும்போது " எனது நண்பர் ஒருவர் 35 வயதான ஓய்வுபெற்ற முன்னாள் ராணுவ வீரர் ஒருவருக்கு பாதுகாப்பு பணியை வழங்கியுள்ளார். 

அக்னிபாத் திட்டத்தின் மூலம் பயிற்சி முடித்து வெளிவரும் வீரர்கள் ஒவ்வொருவரிடமும்  21 முதல் 25 வயதிற்குள் அவர்கள் கையில் 11 லட்சம் இருக்கும். அவர்களுக்கு அக்னிவீரர்கள் என்ற அடையாளமும் இருக்கும். பாரதிய ஜனதா அலுவலகத்திற்கு பாதுகாப்பை அதிகரிக்க விரும்பினால் நான் அவர்களுக்கே முன்னுரிமை அளிப்பேன்" என தெரிவித்தார்.

பிஜேபி தேசிய பொதுச்செயலாளர் இளைஞர்களுக்கு காவலாளி வேலை கொடுத்து அவர்களை அவமானப்படுத்துகிறார் என காங்கிரஸ் எம்பிக்கள் கமிட்டியின் ஊடகப்பொறுப்பாளரான கேகே.மிஸ்ரா விமர்சித்துள்ளார். இதுகுறித்து பிஜேபி செய்தித்தொடர்பாளர் ஹிதேஷ் கூறுகையில் " இந்த திட்டம் பெரும் புரட்சியை ஏற்படுத்தும். 

ஐரோப்பாவை போல நமது நாட்டில் நன்கு பயிற்சி பெற்ற சிவில் படைகள் இல்லை. இந்த திட்டம் நிச்சயமாக வேலைவாய்ப்பை அதிகரிக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே" என தெரிவித்துள்ளார்.