24 special

எங்களின் ஒரே பதில் "இதுதான்" மிரட்டல் விடுத்த ஆர்எஸ்.பாரதிக்கு நாராயணன் திருப்பதி பதிலடி..!


நடப்பது திமுக ஆட்சி என அண்ணாமலைக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ்.பாரதி மிரட்டல் விடுத்தார் இந்த சூழலில் ஆர்எஸ் பாரதிக்கு பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார் அது பின்வருமாறு :-


"தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் துபாய் சென்றது குறித்து பாஜக தலைவர் திரு. அண்ணாமலை அவர்கள் கூறியுள்ள கருத்துகள் முதல்வரின் மதிப்பையும் மரியாதையையும் குலைக்கின்ற வகையில் பேசப்பட்ட அவதூறு கருத்துகள் என்பதோடு, அந்நிய முதலீட்டை  இந்தியாவிற்கு கொண்டு வரும் முதல்வரின் முயற்சியை சீர்குலைக்கும் தேச விரோத பேச்சு என்பதால் தேச துரோக குற்றச்சாட்டில் கையாள வேண்டிய நடவடிக்கையும் கூட" என்று தி மு க அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி அவர்கள் திரு.அண்ணாமலை அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் எது தேச விரோத பேச்சு? திராவிட நாடு கோரிக்கையை வரவேற்பதாக மார்ச் 2018 ல் தி மு க தலைவர் ஸ்டாலின் பிரிவினைவாதம்  பேசியது தேச விரோத பேச்சு இல்லையா?

பாதுகாப்பு கண்காட்சியை அர்ப்பணிக்க தமிழகம் வந்த பிரதமரை 'கோ பேக் மோடி' என்றும் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தது தேச துரோகம்இல்லையா? நாட்டினுடைய பாதுகாப்பை சீர்குலைக்கும் முயற்சி தேச விரோத செயல் இல்லையா? நாற்பதற்கும் மேற்பட்ட  நாடுகள் இந்த கண்காட்சியில் பங்கேற்ற நிலையில், அதற்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டது தேச விரோதம் இல்லையா? அவதூறு செய்தது தேச துரோகம் இல்லையா?

நல்லுறவை ஏற்படுத்தி அந்நிய முதலீடுகளை இந்தியாவிற்கு கொண்டு வந்து வளர்ச்சி பாதைக்கு இந்தியாவை அழைத்து சென்று கொண்டிருக்கிற பிரதமரை "வெளிநாடு வாழ் பிரதமராக இருக்கிறார், ஊர் ஊராக சுற்றி கொண்டிருக்கிறார்" என்று 2019ம் ஆண்டு கூறியது தேச துரோகம் என்றும் தேச விரோதம் என்றும் ஒப்பு கொள்கிறாரா ஸ்டாலின் அவர்கள்?  

மோடி வெளிநாட்டுக்கு செல்கிறாரே? அது அவர் சொந்த பணமா? மக்களுடைய வரிப்பணம் தயவு செய்து மறந்துவிடக்கூடாது" என்று சொன்ன ஸ்டாலின் அவர்கள் துபாய்க்கு செல்வது அரசு முறை பயணம் என்று சொல்கிறாரே? அது அவர் சொந்த பணமா? மக்களுடைய வரிப்பணத்தில் தானே செல்கிறார் என்பதை மறந்து விட்டாரா?

அண்ணாமலை கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல், வழக்கு தொடுப்போம் என்று மிரட்டுவது வேடிக்கையாக உள்ளது. இந்த மிரட்டல்களுக்கெல்லாம் அஞ்சாது பாஜக. நடப்பது தி மு க ஆட்சி என்ற ஆர் எஸ் பாரதியின் கருத்துக்கு எங்களின் ஒரே பதில் 'நடப்பது பாஜக ஆட்சி' என்பதே என குறிப்பிட்டுள்ளார்.