புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா பிரம்மாண்டமாக நிறைவடைந்த நிலையில், பிரதமர் மோடியை கொச்சையாக விமர்சித்த திமுக அமைச்சர் ஒருவர் நெட்டிசன்களின் விளாசலால் அந்த ட்விட்டர் பதிவையே டெலிட் செய்துவிட்டு எஸ்கேப் ஆகியுள்ளார்.
நேற்று பாரத பிரதமர் மோடி இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்தார். அதற்கு முன்னதாக ஆதீனங்களின் ஆசியுடன் செங்கோல் பரிமாற்றம் செய்யும் நிகழ்வு அரங்கேறியது. செங்கோலை அவையில் நிறுவுவதற்கு முன்னதாக நடைபெற்ற யாகசாலை பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த செங்கோல் முன்பு சாஸ்ட்டாங்கமாக விழுந்து பிரதமர் மோடி வணங்கினர். அந்த நேரத்தில் ஒரே ஒரு ஆதீனம் மட்டும் கையை உயர்த்திக் காட்டினார். மற்றவர்கள் அமைதியாக நின்றுகொண்டு இருந்தனர். செங்கோலைத் தான் பிரதமர் வணங்கினார் என்பதில் அவர்கள் தெளிவாக இருந்தனர். ஆனால், பிரதமர் மோடி ஆதீனங்கள் காலில் விழுவதாக நினைத்துக்கொண்ட மனோதங்கராஜ், பிரதமரையே அவமதித்துள்ளார்.
பிரதமர் மோடி செங்கோலை விழுந்து வணங்கிய புகைப்படம் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வரும் நிலையில், இந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த அமைச்சர் மனோ தங்கராஜ், ‛மூச்சு இருக்கா? மானம்?? ரோஷம்???' என விமர்சித்து பதிவிட்டிருந்தார். தமிழர்களையும், தமிழ்நாட்டையும் உலக அரங்கில் பெருமைப்படுத்தும் விதமாக பிரதமர் மோடி தமிழக ஆதீனங்கள் வழங்கிய செங்கோலை பெற்றுக்கொண்ட நிகழ்வு கருதப்படுகிறது. இதனை தமிழர்கள் பலரும் சோசியல் மீடியாவில் கொண்டாடி வருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல் ஹாசன் என அரசியல் கடந்து திரைப்பிரபலங்களும் பிரதமரை வாழ்த்தி வருகின்றனர்.
இப்படியொரு மகத்தான தருணத்தில் அமைச்சர் பொறுப்பில் இருக்கும் ஒருவர் தான் வேற்று மதத்தை சார்ந்தவர் என்பதால் இன்னொரு மதத்தை விமர்சிக்கும் விதமாகவும், உலக நாடுகளே வியந்து பாராட்டும் தேசத்தலைவரை கொச்சைப்படுத்தும் விதமாகவும் பதிவிடலாமா? என தமிழக மக்கள் கேள்வி எழுப்பினர்.
மத்திய அரசை எதிர்ப்பது என்றால் அரசியல் ரீதியாக எதிர்க்க வேண்டும். மத ரீதியாக எதிர்க்க இவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது?' என்றும் கேள்விகள் எழுந்தன.
மேலும் அமைச்சர் மனோ தங்கராஜ் அடிக்கடி இந்து விரோத கருத்துக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருவதையும் நெட்டிசன்கள் சிலர் பதிவிட்டு விமர்சித்தனர். மனோ தங்கராஜின் இந்த விமர்சனத்திற்கு பாஜக தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்தன.
இப்படி 4 திசைகளில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து அமைச்சர் மனோ தங்கராஜ் பிரதமர் குறித்த சர்ச்சை பதிவை நீக்கியுள்ளார். இதன் மூலம் பிரதமரை கொச்சையாக விமர்சித்தால் தமிழக மக்கள் எவ்வாறு எதிர்வினையாற்றுவார்கள் என்பதை இப்போது திமுக அமைச்சர்கள் உணர்த்திருப்பார்கள் என அடித்துக்கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.