24 special

வேளாண் பட்ஜெட் வேதனையின் உச்சம் - டிடிவி தினகரன்

Rtv dinakaran
Rtv dinakaran

தமிழகத்தில் 2023-2024 வேளாண்மை பட்ஜெட் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முற்றிலும் அழிக்கிறது என அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் டிடிவி தினகரன்.


திமுக சட்டமன்றத்தில் இரண்டாவது நாளாக இன்று வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு வேளாண்மை பட்ஜெட் குறித்து அமமுக கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் திமுக அரசை விமர்சித்து டிவிட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, திமுக அரசு மூன்றாவது முறையாக வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. இதில் “விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முழுமையடைய செய்வதாக கூறி விவசாயிகளை மேலும் மேலும் வேதனையடைவே செய்துள்ளது”. மேலும் விவசாயிகளின் நிலங்கள் தொடர்ந்து மனைகளாக மாற்றப்படுகிறது என்று குறிப்பிட்ட, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் சட்டசபையில் வருத்தம் தெரிவித்ததாக கூறினார்.

எனினும், தமிழ்நாடு முழுவதும் இருக்கும் பல்வேறு வேளாண்மை அல்லாத திட்டத்திற்கு விவசாயிகளின் நிலங்களை அரசே கைப்பற்றி வரும் நிலையில், அதற்கு தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்பதை, இந்த பட்ஜெட்டில் அமைச்சர் ஏன் குறிப்பிடவில்லை என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

மேலும் அதிகமான நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உருவாக்கியுள்ளோம் என்று அமைச்சர் பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். ஏற்கனவே விவசாயிகளின் நெல் மூட்டைகள் திறந்த வெளியில் வைக்கப்பட்டு மழையில் நனைந்து வீணாவதை தடுக்கவும், விவசாயிகளிடமிருந்து நெல்லுக்கு பணம் வசூலிப்பதை தடுக்கவும் அந்த அறிக்கையில் எதுவும் குறிப்பிடவில்லை என்றார். 

அதேபோல விவசாயிகளுக்கு கூட்டுறவு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய கோடிக்கணக்கான நிலுவை தொகையின் மீது என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பதையும், நதிநீர் இணைப்பு திட்டத்தை பற்றியும் வேளாண்மை அமைச்சர் பன்னீர்செல்வம் குறிப்பிட மறந்துவிட்டது ஏன்? என பல்வேறு குற்றச்சாட்டுகளை திமுக அரசின் மீது முன்வைத்தார்.

இந்நிலையில், திமுக அரசு மூன்றாவது முறையாக தாக்கல் செய்திருக்கும் வேளாண்மை பட்ஜெட்டில், தமிழக விவசாயிகளை கருத்தில் கொள்ளாமலும், அவர்களுடைய வாழ்வாதாரத்தை முழுமையாக அழித்து, வேதனையின் உச்சத்திற்கு தள்ளிருக்கிறதாகவும் குற்றம்சாட்டினார்.