
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதுதொடர்பாக நாள்தோறும் ஊடகங்களில் வரும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. மக்கள் பாதுகாப்புடன் வாழ முடியாத சூழல் தான் தமிழகத்தில் நிலவுகிறது. தமிழகத்தில் கொலைகள் நடக்காத நாளே இல்லை. சென்னையில் அண்மையில் மட்டும் 12 கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தோட்டங்களில் வசிக்கும் முதியவர்களை குறிவைத்து கொங்கு பகுதியில் நடக்கும் கொலைகள் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதுபோலவே தென் மாவட்டங்களிலும் கொலைகள் நடக்கின்றன.நெல்லையில், முன்னாள் காவல்துறை உதவி ஆய்வாளர் ஜாகீர் உசேன் அவர்கள், தொழுகை முடித்து வந்தநிலையில் கொலை செய்யப்பட்டார்.
பாளையங்கோட்டையில் தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவன், சக மாணவனை அரிவாளால் வெட்டிய சம்பவம் நடந்தேறியது. தமிழகத்தில் பள்ளி வளாகங்களில் கூட உயிருக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது.போதைப்பொருட்கள், மதுபானம் பெருகி இளைய தலைமுறையை அழிக்கும் அவலம் அரங்கேறி வருகிறது. மோசடி திராவிட மாடல் ஆட்சியில் பட்டியலின மக்கள் படும் துன்பங்கள் ஒன்றா இரண்டா என் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது.
இதற்கிடையில் ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களைத் தொடர்ந்து, நாமக்கல்லிலும் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்துவந்த மூதாட்டி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருப்பது, கொங்கு மண்டலத்தை அதிரவைத்திருக்கிறது! ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில், வீட்டில் தனியாக வசிக்கும் முதியவர்களைக் குறிவைத்துப் பணம், நகைக்காகக் கொலைசெய்யும் சம்பவங்கள் அதிகரித்துவருவது, பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறது. இந்த வரிசையில், 8-6-2025 அன்று, நாமக்கல் மாவட்டத்திலும் மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பது,பதட்டத்தை ஏற்படுத்தியது.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர், சித்தம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சாமியாத்தாள் (67). இவரின் கணவர் இறந்துவிட்டார். வீட்டின் அருகிலுள்ள சொந்தத் தோட்டத்தில் விவசாயம் செய்தபடி, தனியாக வசித்து வருகிறார்.கடந்த சனிக்கிழமை இரவு, தோட்டத்து வீட்டின் வெளியே உறங்கிக்கொண்டிருந்த சாமியாத்தாளை, மர்ம நபர்கள் கத்தியால் சரமாரியாகக் குத்திவிட்டு தப்பியோடியிருக்கின்றனர். இதில் சாமியத்தாள் உயிரிழந்தார்.
மேற்கு மண்டலத்தைப் பொறுத்தவரை, பெரும்பாலும் பண்ணை வீடுகளாக இருக்கின்றன. பெற்றோர்கள் சொந்த ஊரில் விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். அவர்களின் பிள்ளைகளோ, பெரும்பாலும் நகரங்களில் வேலைசெய்கிறார்கள். நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் சுமார் 2,600 முதியவர்கள் தனியாக வீட்டில் வசித்துவருபவர்களாகக் கண்டறியப்ப ட்டிருக்கின்றனர். ஆனால், நாமக்கல் மாவட்டத்தில் 2,200 காவலர்கள் மட்டுமே இருக்கின்றனர்.
இந்தநிலையில் ''ரியல் எஸ்டேட் கம்பெனிகள் இந்த கொலைகளுக்கு பின் இருக்குமா என்ற ஒரு சந்தேகம் வருகிறது. ஏனென்றால் குறிப்பாக இந்த மாவட்டங்களில் இருக்கக்கூடிய வயதான பெற்றோர்கள் வசிக்கக்கூடிய இடங்களில் எல்லாம் அவர்களின் குழந்தைகள் வெளிநாட்டில் வசதியாக உள்ள குடும்பங்கள் தான். அவர்களுக்கு தோட்டத்து வீடுகளை உடனடியாக விற்கும் சூழல் கிடையாது.
ஆனால் இந்த பகுதியில் நடந்து கொண்டிருக்கின்ற இந்த பொருளாதார முன்னேற்றத்தின் காரணமாக நிலத்தை அபகரிக்க ரியல் எஸ்டேட் மாஃபியா கும்பல் இப்படிக் கூட திட்டமிட்டு வேறு விதமாக தாக்குதல் நடத்துவார்களோ என்ற சந்தேகம் இருக்கிறது. இந்த சந்தேகத்தை கூட காவல்துறை அந்த கோணத்தில் விசாரிக்க வேண்டும். இதுபோன்ற பாதுகாப்பற்ற சூழல் வந்தால் பெற்றோர்களை உடனடியாக நகரத்திற்கு கொண்டு வந்து குடிவைத்துவிட்டு அந்த பூமியை விற்க ஆரம்பிப்பார்கள். அதனால் ரியல் எஸ்டேட் மாஃபியா இதற்குப் பின் இருக்கிறதா என்ற கோணத்தில் காவல்துறை விசாரிக்க வேண்டும்'' என பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியுள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.