
இஸ்ரேல் ஈரான் இடையேயான போர் 12 நாட்களுக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். போர் நிறுத்தத்தை ஒப்புக்கொண்ட இஸ்ரேல்,ஈரானுக்கு எதிராகத் தொடங்கப்பட்ட ஆப்ரேஷன் ரைசிங் லயன் நடவடிக்கையின் நோக்கத்தை அடைந்து விட்டதாகவும் கூறியுள்ளது. இஸ்ரேல்- ஈரான் போர் மத்திய கிழக்கின் அரசியலின் களத்தையே தலைகீழாக மாற்றி உள்ளது.
இஸ்லாமிய நாடாக அறிவித்துக்கொண்ட நாள் முதலாக ஈரான், தனது ஆதிக்கத்தை வலுப்படுத்த முயற்சி செய்து வந்தது. அதன் அடிப்படையில், ஹமாஸ், ஹிஸ்புல்லா,ஹவுதி என பல்வேறு இராணுவ குழுக்களை உருவாக்கி, மத்திய கிழக்கில் தன்னை ஒரு வலிமைமிக்க நாடாக நிலைநிறுத்திக் கொண்டது ஈரான்.
இதன் அடுத்த கட்டமாக அணு ஆயுதங்களைத் தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. ஈரானின் அணுசக்தி திட்டம் தனது இருப்புக்கு அச்சுறுத்தல் என இஸ்ரேல் நினைத்தது. மத்திய கிழக்கில் அதிக இராணுவத் தளங்களை வைத்துள்ள அமெரிக்காவும் ஈரான் அணுசக்தி நாடாக மாறுவதை விரும்பவில்லை.நீறுபூத்த நெருப்பாக இருந்து வந்த இஸ்ரேல்- ஈரான் மோதலை இவ்வளவு தூரம் பெரிய போராகக் கொண்டுவந்து விட்ட பெருமை ஹமாஸ் பயங்கரவாதி யாஹ்யா சின்வாரையே சேரும்.
2023ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி, இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 1200க்கும் மேற்பட்ட இஸ்ரேல் மக்கள் பலியானார்கள். மேலும் 250க்கும் மேற்பட்டவர்களை ஹமாஸ் பயங்கரவாதிகள் சிறைபிடித்துச் சென்றனர்.இதனையடுத்து, ஈரானின் ஆதரவில் செயல்படும் ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹவுதி போன்ற பயங்கரவாத அமைப்புக்கள் மீது கடுமையான இராணுவ நடவடிக்கை எடுத்த இஸ்ரேல், அந்த அமைப்புக்களை ஒட்டுமொத்தமாக அழித்தது. இதன் விளைவாக சிரியாவிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.கடந்த ஜூன் 13 ஆம் தேதி,ஆப்ரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரானின் அணுசக்தி தளங்களைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கியது.
21 முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள் இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்குக் கூட்டாகக் கண்டன அறிக்கை வெளியிட்ட போதிலும் ஜி 7 நாட்டுத் தலைவர்கள் அனைவரும் இஸ்ரேலுக்கு ஆதரவாகக் கூட்டறிக்கை வெளியிட்டனர்.ஈரானின் அணுசக்தி கோட்டை என்று கூறப்படும் பூமிக்கு அடியில் மிக ஆழத்தில் அமைந்துள்ள FORDOW அணுசக்தி தளத்தை அழிக்கும் பங்கர் பஸ்டர் குண்டுகள் அமெரிக்காவிடம் மட்டுமே உள்ளது. எனவே அதைப் பயன்படுத்தி ஈரானின் அணுசக்தி தளங்களைத் தாக்க, இஸ்ரேல் வலியுறுத்தியது.
உலகமே எதிர்பார்க்காத நிலையில், இஸ்ரேலின் வேண்டுகோளை ஏற்று, அமெரிக்கா ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது. பி-2 ஸ்பிரிட் ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்கள் உட்பட 125க்கும் மேற்பட்ட அதிநவீன விமானங்களால் அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.
இதைத் தொடர்ந்து, ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கொமெனி, ரஷ்ய அதிபர் புதினிடம் இராணுவ உதவி கேட்டு நின்றார்.
இஸ்ரேல் கிட்டத்தட்ட ரஷ்ய மொழி பேசும் நாடாகவே உள்ளது என்றும், சோவியத் யூனியன் மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த சுமார் இரண்டு மில்லியன் மக்கள் இஸ்ரேலில் வாழ்கிறார்கள் என்றும் கூறியுள்ள புதின், இதன் மூலம் ஈரானுக்கு ரஷ்யாவின் ஆதரவு இல்லை என்பதைச் சாமர்த்தியமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஏற்கெனவே அமெரிக்காவுடன் வர்த்தக போரில் இருக்கும் சீனாவும் ஈரானுக்கு உதவ முன்வரவில்லை. நாட்டின் 90 சதவீத எண்ணெய்யை ஈரானில் இருந்து இறக்குமதி செய்த போதும் சீனா ஈரானை விட்டு விலகி நிற்கிறது. அதனால் தான் அமெரிக்கத் தாக்குதலுக்குச் சம்பிரதாயமாக இருநாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.
கடந்த ஆண்டு பிரிக்ஸ் அமைப்பில் ஈரான் சேர்ந்தது என்றாலும், பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் எதுவும் ஈரானுக்கு ஆதரவாக இல்லை என்பதே உண்மை. ஐரோப்பிய நாடுகளும் இஸ்ரேல்- ஈரான் விவகாரத்தில் அமெரிக்காவிடம் பொறுப்பைக் கொடுத்து விட்டு வேடிக்கை பார்க்கின்றன.DEATH TO AMERICA மற்றும் DEATH TO ISRAEL என்ற கொள்கையுடன் உள்ள ஈரான் மிகவும் பலவீனமான நிலையில் உள்ளது.சர்வதேச அளவில் தன்செல்வாக்கையும்,மத்திய கிழக்கில் தன் இருப்பையும் இழந்து நிற்கிறது என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.