24 special

மொழி தெரியாமல் "காதல்" மட்டும் தான் செய்ய முடியும்..! வெளுத்து வாங்கிய நெறியாளர் தேன்மொழி எழில்...!

Thenmozhi
Thenmozhi

இந்தி என்றாலே தமிழகத்தைப் பொறுத்தவரையில் திணிக்கப்படுகிறது என்று ஒரு பெரும்பாலான குற்றச்சாட்டை பொதுவாக பார்க்கலாம். ஆனால் அதில் இருக்கக்கூடிய பல உண்மைத் தன்மைகளை அலசி ஆராய்ந்தால் பல்வேறு விஷயங்கள் நமக்கு தெரியவரும்.


உதாரணத்திற்கு.. கல்விதான் முக்கியம் என நம் பிள்ளைகளை எந்த பள்ளியில் படிக்க வைக்கலாம், எப்படி படிக்க வைக்கலாம், எந்த துறை சார்ந்த படிப்பு படிக்கலாம் என பல கோணத்தில் ஆராய்ந்து செய்கிறோம்.

ஆனால் அவ்வாறு செய்யும் வேலைகளில் அடுத்தகட்ட பதவிக்கு செல்வதற்கும், மிகத் திறமையாக அனைவரையும் கட்டியாளும் பக்குவம் ஒரு மனிதனுக்கு எப்போது கிடைக்கும் என்றால் மொழி குறித்த புரிதலும் அறிதலும் கொண்டிருந்தால் மட்டும் தான். அதில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இந்தி என வரும்போது தேசிய மொழி இல்லை என்றாலும், அலுவல் மொழியாக இருக்கின்றது. இன்று நாம் நம் தாய்மொழியாம் தமிழ் மொழியை உலகறியும் மொழியாக பார்க்கிறோம்.

பழமையும் தொன்மையும் வாய்ந்த நம் தமிழ் மொழி குறித்து உலகநாடுகளுக்கு, எங்கு சென்றாலும் தமிழ்மொழியின் சிறப்பை எடுத்துக் கூறும் போது, மற்ற மொழி பேசுபவர்களும் புரிந்துக்கொள்வதற்கு, அங்கு அவர்களுக்கு ஆங்கிலத்தில் எடுத்துக் கூற வேண்டி வரும் அல்லவா? அதேதான் இங்கும். தமிழகம் தாண்டி மற்ற மாநில மக்கள் அனைவரையும் உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளுங்கள்.

கர்நாடக மாநிலம் எடுத்துக்கொள்வோம். சாதாரண வீட்டு வேலை செய்யக்கூடிய அதிகம் படிப்பறிவில்லாதவர்களுகும் கூட கன்னடம் இந்தி இங்கிலிஷ் அடுத்ததாக தமிழ் தெரிகிறது. ஆந்திராவை எடுத்துக்கொண்டால் தெலுங்கு இங்கிலீஷ் ஹிந்தி தெரிகிறது. 

இப்படி ஒவ்வொருவரும் குறைந்தது மூன்று மொழிகளை பேச கற்றுக் கொண்டிருக்கும்போது, அவர்களால் மிக எளிதாக வேலையை பெற முடிகிறது, கருத்து பரிமாற்றம் செய்ய முடிகிறது, மாநிலம் விட்டு வேறு மாநிலத்திற்கு சென்று திறம்பட செயல்பட முடிகிறது. ஆனால் தமிழகத்தை எடுத்துக் கொள்ளுங்களேன் தமிழ் முழுமையாக தெரியுமா என்றால், பேசுவதற்கு மட்டுமே பெரும்பாலானோருக்கு நன்கு தெரியும். பலருக்கும் பிழையின்றி எழுதவும் தெரியாது.

அதிலும் குறிப்பாக இலக்கணம் இலக்கியம் தெரியுமா என்றால் பெரும் கேள்விக்குறி தான். ஆங்கிலம்... அது கட்டாயம் ஒவ்வொருவரின் திறமைக்கு ஏற்ப அவரவரின் ஆங்கிலப் புலமை இருக்கின்றது. இப்போது இந்திக்கு வருவோம். இந்தி மொழி பேச தெரியாத போது நம்மால் குறிப்பாக வடமாநிலங்களுக்கு செல்லும் போது பெரும் சிரமத்தை அனுபவிக்க நேரிடும். ஆங்கிலம் மூலம் ஓரளவுக்கு சமாளிக்க முடியும் என்றாலும்கூட, அனைவருக்கும் ஆங்கிலம் தெரியுமா என்றால் இல்லை.

ஆனால் இந்தியாவில் பெரும்பான்மையாக பேசக்கூடிய மொழி இந்தி என்பதால் வியாபார நோக்கத்திற்கும், மாநிலம் விட்டு மாநிலம் சென்று வியாபாரத்தை பெருக்குவதற்கும், கருத்துப் பரிமாற்றத்திற்கும் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி செல்வதற்கும், ஹிந்தி மிகப்பெரிய பயனுள்ளதாக இருக்கும். 

ஆனால் இங்கு நடக்கும் அரசியல் சூழ்ச்சிகளால் இந்தி தெரியாது போடா என விகண்டாவாதம் பேசிக்கொண்டு சமூக வலைத்தளத்தில் ட்ரண்ட் செய்து கொண்டு வருவதால் பாதிக்கப்படுவது என்னமோ நாம் மட்டுமல்ல. நம் பிள்ளைகளும் தான். அதுமட்டுமல்ல இந்தி தெரிந்து கொள்வதால் நம் தாய் மொழியின் பெருமையையும் அருமையையும் இந்தி மொழி பேசும் நபர்களுக்கும் தமிழில் மிக அழகாக சொல்லிக் கொடுக்கலாம்.

இப்படி இதில் இருக்கக்கூடிய முக்கியமான விஷயங்களை தெரிந்து கொள்ளாமல், வாழ்க்கையில் நாம் முன்னேறவும் முடியாமல், முன்னேறி இருப்பவர்களைப் பார்த்து அவர்கள் மட்டும் எப்படி முன்னேறி விட்டார்கள் என பொறாமைப்பட்டு கொண்டு ஒரு மூலையில் அமர்ந்து குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டு பலரும் இருக்கின்றனர். 

ஆனால் இந்தி தெரியாத போடா என்பவர்கள் அனைவருக்குமே நன்கு இந்தி தெரியும். அவங்க வீட்டுப் பிள்ளைகளும் தமிழ் ஆங்கிலம் இந்தி பிரெஞ்சு ஜெர்மனி சைனீஸ் மொழி என பல மொழிகளில் கலக்குகின்றனர். தேசிய அளவில் அல்ல சர்வதேச அளவில் நாடு கடந்து வியாபாரத்தில் கொடி கட்டி பறக்கின்றனர்.

இதெல்லாம் அறியாமல் புரியாமல் இந்தி தெரியாது போடா என நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம் என்பது குறித்த புரிதல் எப்போது நமக்கு ஏற்படுகிறதோ அப்போது தான் நம் குழந்தைகளுக்கும் ஒரு விடிவுகாலம் கிடைக்கும். இப்படி ஒரு சமயத்தில், நெறியாளர் தென்மொழி எழில் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு இட்டு உள்ளார். 

அதில் "இந்தி (மற்ற மொழிகளும்) கற்றுக்கொள்வதால், நம் தாய் மொழி தமிழை மற்ற மொழி பேசுபவர்களுக்கும் கற்று தர முடியும். அதை விட்டுட்டு, இந்தி தெரியாது போடா என்றால் குண்டு சட்டிக்குள் குதிரை கூட ஓட்ட முடியாது. மொழி தெரியாமல் கண்ணும் கண்ணும் நோக்கி காதல் மட்டும் தான் செய்ய முடியும். 🤭❣️" - இவ்வாறு பதிவிட்டு உள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் கவனத்தை ஈர்த்து வருகிறது. மொழி குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறது.