24 special

முதலமைச்சரின் வேஷத்தை அவிழ்த்த அண்ணாமலை!....டெல்ட்டாவில் போட்ட வெடி!

Annamalai, Stalin
Annamalai, Stalin

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வரும் நடைபயணத்திற்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். கடந்த ஜூலை மாதம் ராமேஸ்வரத்தில் தொடங்கிய 'என் மண் என் மக்கள்" நடைபயணம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத்திற்கும் சென்று மக்களை சந்தித்து குறைகளை கேட்டு வருகிறார். நான்காம் கட்ட பாதயாத்திரை தொடங்கி நேற்று டெல்டா மாவட்டம் திருவையாறு தொகுதிக்கு சென்றார். அப்போது அங்குள்ள விவசாயிகளிடம் கலந்துரையாடி நிலத்தில் இறங்கி வேலை செய்தது விவசாயிகளிடையே நெகிழ்ச்சி அடைய செய்தது. மேலும், விவசாயம் பற்றி ஏதும் தெரியாமல் நானும் விவசாயி தான் என்று முதலமைச்சர் ஸ்டாலின் சொல்வது நகைச்சுவையாக இருக்கிறது என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சமூக தளத்தில் பதிவிட்டது. 


'இன்றைய #EnMannEnMakkal பயணம், நம் கால் பதித்தாலே முக்தி தரும் இடமான திருவையாறு சட்டசபை தொகுதி திருக்காட்டுப்பள்ளியில் மக்கள் ஆரவாரத்துடன் சிறப்பாக நடந்தேறியது. கைலாயத்துக்குச் செல்ல முடியாதவர்கள் திருவையாறுக்கு வரவேண்டும் என்று சொல்வார்கள். கைலாயத்தில் கிடைக்கும் இறைவனின் காட்சி திருவையாறில் கிடைப்பதாக ஐதீகம்.  அத்தகைய புண்ணிய பூமி திருவையாறில் காவிரி அன்னையை வணங்கி, மாண்புமிகு பாரதப் பிரதமர்  நரேந்திர மோடி அவர்கள் மீது கொண்ட பேரன்பை, நடுக்காவேரி கிராமத்தில் இருந்து திருக்காட்டுப்பள்ளி வரை 12 கிமீ தொலைவுக்கு தொடர் மழையையும் பொருட்படுத்தாமல் நடைபயணத்தில் பங்கேற்று மக்கள் வெளிப்படுத்தினர். நடுக்காவிரிப் பகுதியான இந்தப் பகுதியில் மட்டும் சுமார் ஒரு லட்சம் பேர், 40,000 ஹெக்டேர் அளவுக்கு விவசாயம் செய்கிறார்கள். நெல், கரும்பு, வெற்றிலை என இங்கு உற்பத்தியாகும் விவசாயப் பொருள்கள், நாடு முழுவதும் விற்பனையாகின்றன.

இந்தப் பகுதியில், மகளிர் சுய உதவிக் குழுவுக்கான மத்திய அரசு கடன் உதவி, கோகுல் திட்டம் மூலமாக கறவைமாடு வாங்க மானியத்துடன் கடன் உதவி, தொழில் முனைவோருக்கான முத்ரா கடன் உதவி என மத்திய அரசின் திட்டங்களை இந்தப் பகுதி மக்களுக்குக் கொண்டு செல்லும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. கடந்த 2018 ஆம் ஆண்டு, மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தார். அதன் பிறகு, கடந்த ஐந்து ஆண்டுகளாக, கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சியில் இருந்து போது, காவிரி நதி நீர் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் டெல்டா பகுதிக்குக் கிடைத்துக் கொண்டிருந்தது. ஆனால் கர்நாடகத்தில் திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, மேகதாது அணையைக் கட்டுவோம், காவிரி நதி நீர் தர மாட்டோம் என்று கூறி, காவிரி நீர் கிடைக்காமல், நம் கண் முன்னால் நிலங்கள் தரிசு நிலமாக மாறிக் கொண்டிருக்கின்றன.

தஞ்சை, திருவையாறு உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்தான் இந்தியா முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்குச் செல்கிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 முதல் நவம்பர் 8 ஆம் தேதி வரை, தமிழகத்தில் இருந்து மத்திய அரசு, 8,25,000 டன் நெல்லைக் கொள்முதல் செய்தது. ஆனால் இந்த ஆண்டு அதே காலகட்டத்தில், 5,25,000 டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது. காவிரியில் தண்ணீர் குறைந்த காரணத்தினால், இந்த ஒரு ஆண்டு மட்டும் மூன்று லட்சம் டன் நெல் மகசூல் குறைந்திருக்கிறது.  தங்கள் நிலத்தைத் தாய்க்குச் சமமாக மதிக்கிறவர்களே டெல்டாக்காரர்கள். விவசாயம் என்றால் என்ன என்று தெரியாத, விவசாயிகள் கஷ்டம் அறியாத முதலமைச்சர் ஸ்டாலின், தன்னை டெல்டாக்காரன் என்று கூறிக் கொள்வது நகைச்சுவை.

காவிரியில் நீர் திறக்காமல் டெல்டா மக்களை வஞ்சிக்கும் தங்கள் கூட்டணிக் கட்சி காங்கிரஸை இதுவரை கண்டித்திருப்பாரா? இதே நிலை தொடர்ந்தால், இன்னும் இரண்டு ஆண்டுகளில் ரேஷன் கடைகளில் நம் மக்களுக்கு அரிசி கிடைப்பதே தட்டுப்பாடாகிவிடும்.  மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அரசு, நெல்லுக்குக் குறைந்த பட்ச ஆதார விலையை 67% உயர்த்தியிருக்கிறது. யூரியா 45 கிலோ உர மூட்டையின் விலை 3,000 ரூபாய். ஆனால், மத்திய அரசு 250 ரூபாய் மானிய விலையில் வழங்குகிறது. விவசாயிகளுக்கு வருடம் 6,000 ரூபாய் நிதி, இயற்கை விவசாயத்திற்கு ஊக்க நிதி, பயிர் காப்பீடு என விவசாயம் செழிக்க பாரதப் பிரதமர் கொண்டு வந்துள்ள திட்டங்கள் ஏராளம்.

திமுக ஆட்சிக்கு வந்த 30 மாத காலத்தில், விவசாயம் நொடித்துப் போக ஆரம்பித்திருக்கிறது. திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில்தான், மீத்தேன், நிலக்கரி என அத்தனைத் திட்டங்களையும் கொண்டு வந்து விட்டு, தற்போது எதிர்ப்பது போல நாடகமாடுகிறார்கள். ஆனால் பாஜக, உடனடியாக மத்திய அமைச்சரிடம் பேசி, நிலக்கரி எடுக்கும் திட்டத்தையே ரத்து செய்தது. விவசாயிகளுக்கு உற்ற துணையாக தமிழக பாஜக என்றும் இருக்கும்.  இந்தத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், தொகுதிக்கோ, மக்களுக்கோ, விவசாயத்துக்கோ ஒன்றுமே செய்ததில்லை. மத்திய நிதித்துறை இணையமைச்சராக இருந்தபோது கேரள மாநிலத்தில் நடந்த ஊழல் வழக்கில் லஞ்சம் வாங்கியதாகக் குற்றம்சாட்டப்பட்டவர். பாஜக மட்டுமே ஊழலுக்கு எதிரான கட்சி.

திமுக மகனுக்கும் மருமகனுக்கும் நடத்தப்படும் கட்சி. இந்த ஊழல் மலிந்த, மக்கள் விரோத திமுக முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட வேண்டும். சோழர்களின் ஆட்சியில் சிறப்பு பெற்ற புண்ணிய பூமியான திருவையாறு சிறக்க, விவசாயம் செழிக்க, இளைஞர்கள் பெருமளவில் விவசாயத்தில் ஈடுபட, மக்கள் நலம்பெற, வரும் பாராளுமன்றத் தேர்தலில் விவசாயிகளுக்காக உழைக்கும் பாரதப் பிரதமர் அவர்கள் கரங்களை வலுப்படுத்த, டெல்டா பகுதியில் இருந்து மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்'. என்று அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.