24 special

அன்னூரைத் தொடர்ந்து நாங்குநேரியில் 2518 ஏக்கர் ..! தோண்டி தோண்டி எடுக்கும் அண்ணாமலை..!

Annamalai
Annamalai

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் அன்னூரில் நேற்று நடந்த மாபெரும் போராட்டத்தை தொடர்ந்து, திமுக அரசு செய்ய தவறிய பல்வேறு விஷயங்களை பட்டியலிட்டு அறிக்கை வெளியிட்டிருக்கின்றார் பஜக தலைவர் அண்ணாமலை. அந்த அறிக்கை பின்வருமாறு...


பத்திரிக்கைச் செய்தி கடந்த அதிமுக ஆட்சியில், சாலை திட்டத்திற்கும், தொழிற்பேட்டை அமைப்பதற்கும், விவசாய நிலங்களைக் கையகப்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று ஆர்ப்பரித்த திமுக, இன்று ஆட்சி அதிகாரம் கைக்கு வந்ததும், இன்று அன்னூர் விவசாயிகளின் பொன் விளையும் நஞ்சை பூமியை எல்லாம் புஞ்சை மண்மேடாக்கத் திட்டம் தீட்டுகிறது. 

சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் தேதி அன்னூர் விவசாயிகளுக்காக முதல் முறையாகக் குரல் கொடுத்தது தமிழக பாரதிய ஜனதா கட்சி. எங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து, டிசம்பர் மாதம் 5ஆம் தேதி இந்த திட்டத்தை நிறுத்தி வைப்பதாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால் வழக்கம் போலப் பின் வாசல் வழியாக வருவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ள திமுக, தங்கள் ஏமாற்றும் வித்தைகளை, விவசாயிகளிடம் காட்டியுள்ளனர். 


இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 10ஆம் தேதி வெளியிடப்பட்ட தமிழக அரசின் அரசாணையில் அன்னூர் வட்டத்தில் உள்ள போகலூர், வடக்கலூர், அக்கரை, செங்கம்பள்ளி மற்றும் மேட்டுப்பாளையம் வட்டத்தில் உள்ள பிள்ளைப்பாளையம், இலுப்பநத்தம் ஆகிய கிராமங்களில் 862 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி அங்கே சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப் போவதாக மீண்டும் அறிவித்துள்ளனர். 

தமிழ்நாட்டில் ஏராளமான தரிசு நிலங்கள் காலியாக கிடக்கும் போது, வறட்சியான பகுதிகளில் விவசாயம் நடைபெறாத பகுதிகளில், மக்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் அவதிப்படும் பகுதிகளில் எல்லாம் தொழிற்பேட்டை அமைக்காமல், விவசாயம் நடைபெறும் நஞ்சை நிலத்தில், தொழிற்பேட்டை அமைக்க சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்கும், நாடக கோஷ்டி தான் திமுக. பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வயிற்றில் அடித்து தான் தொழிற்பேட்டை உருவாக வேண்டுமா? விவசாயிகளின் வலியும் வேதனையும் இவர்களுக்கு புரியவில்லையா? 


தூத்துக்குடி துறைமுகத்துக்கு அருகிலே, 20 ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய திமுக அரசு, நாங்குநேரியில் 2518 ஏக்கர் நிலப்பரப்பில் தொழிற்பேட்டை ஒன்றை அமைத்தது. அருகில் துறைமுகம் இருப்பதால் ஏற்றுமதிக்குக் கூட வாய்ப்புகள் உள்ள இந்த இடம், இன்று வரை எந்த தொழிற்சாலையும் அமைக்கப்படாமல், அந்தப் பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படாமல், பயன்பாட்டுக்கு வராமல், பாழ்பட்டு கிடக்கிறது. எத்தனை விவசாயிகள் தங்கள் நிலங்களை தொழிற்பேட்டைக்காக கொடுத்து இருப்பார்கள். ஏழை விவசாயிகளின்… இழப்பின் வலியை உணராத அரசு, திறனற்ற இந்த திமுக அரசு. 

மத்திய அரசிடம் இருக்கும் புள்ளி விவரங்களின் அடிப்படையில் தமிழகத்தில் 48,195 ஏக்கர் நிலங்கள் தொழிற் பேட்டைகள் அமைப்பதற்காக  கையகப்படுத்தப்பட்டு, இன்னும் எந்த தொழிற்சாலையும் அமைக்காமல், தொழிற்சாலை அமைக்கும் வசதிகளோடு இன்னும் காலியாக கிடக்கிறது. ஏற்கனவே 48,195 ஏக்கர் தொழிற்சாலை அமைக்கப்படாமல் காலியாக இருக்கும்போது, மக்களின் விவசாயிகளின் எதிர்ப்புகளை எல்லாம் மீறி, இன்னும் எதற்காக அதிகப்படியான நிலங்களை கையகப்படுத்த வேண்டும்? 

லூலு மால் போன்ற நிறுவனங்களின் வசதிகளுக்காக, அன்னூர் பகுதியிலே விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்து எதற்காக தொழிற்பேட்டை அமைக்க வேண்டும்?. கேட்டால் இந்த நிலங்கள் தரிசு நிலங்கள் என்று திறனற்ற திமுக அரசு கூறுகிறது. வாழையும் மஞ்சளும், புதினா மல்லியும், தென்னையும் கரும்பும், விளையும் பொன்  செய் பூமியை… யாராவது புஞ்சை பூமி  என்று சொல்வார்களா?

இந்த திறனற்ற திமுக அரசு, ஆவலாக அமைக்க முயற்சிக்கும், தொழிற்பேட்டைக்கு அருகாமையில், பவானிசாகர் அணை இருக்கும் போது,…  இந்த நிலங்கள் எப்படி தரிசு நிலம் ஆகும்? அத்திக்கடவு அவிநாசி திட்டத்தால் அன்னூர் விவசாயிகள் பயன் பெறுவதில்…நாடக திமுக அரசுக்கு என்ன நட்டம்.?

ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய, அவசரம் சட்டம் போட்ட கையோடு, அதற்கான அரசாணையை வெளியிட வக்கில்லாத, இந்த திறனற்ற திமுக அரசு… விவசாய நிலங்களை கையகப்படுத்த மட்டும் எந்தவிதமான கூச்சமும் தயக்கமும் இல்லாமல்,… இந்த நிலங்களைக் கையகப்படுத்தும் அரசாணையை, திமுக அரசு மறக்காமல் வெளியிட்டுள்ளது.

அன்னூர் பகுதியில் இருந்து நாளொன்றுக்கு 20 ஆயிரம் லிட்டர் பசும்பால் வழங்கப்படுகிறது. திமுக அரசு சமீபத்தில் தான் விவசாயிகளுக்கு மூன்று ரூபாய் கூட்டியதாகச் சொல்லியிருந்தார்கள் ஆனால் அவர்கள் சொல்லாதது… மறைமுகமாக நடைபெறுவது… என்னவென்றால்,  ஒரு நாளொன்றுக்குக் கொள்முதல் செய்யப்படும் பாலின் அளவு 2020 ஆம் ஆண்டு ஒப்பிடும்போது நான்கு லட்சம் லிட்டர் குறைந்திருக்கிறது. அதாவது பாலின் விலையை உயர்த்தி, விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் அளவை குறைத்து நேரடியாக விவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்

எங்கும் லஞ்சம்… எதிலும் லஞ்சம்… கொள்முதல் செய்யும் நெல்லுக்கு ஒரு மூட்டைக்கு 60 முதல் 80 ரூபாய் லஞ்சமாக பெறுகிறார்கள். மத்திய அரசு விவசாயிகளின் நலனுக்காக வழங்கும் தொகையில், வரம்பில்லாது, இப்படி கொள்ளை அடிக்கிறது, இந்த திறனற்ற திமுக அரசு.

தமிழக எல்லைக்குள்ளே புகுந்து எண்டே பூமி என்ற ஒரு திட்டத்தை அறிவித்து தேனி மாவட்டத்தின் விவசாயிகள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் 80 ஏக்கர் நிலத்தை தங்களுடைய மாநில எல்லைக்குட்பட்டது என்று சொல்லி கேரள மாநில அதிகாரிகள் கைப்பற்றி இருக்கிறார்கள். ஒன்றல்ல இரண்டல்ல தமிழகத்தின் எண்பது ஏக்கர் நிலத்தை கேரளா அரசு தன்னுடையது என்று கைப்பற்றிக் கொண்டிருக்கும்போது… தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் என்ன செய்து கொண்டிருக்கிறார். அங்கே போய் அந்த மாநில முதல்வரை கட்டிப்பிடித்து மலையாளத்தில் பேசி என்ன பயன்?

2006 இல் நிலமற்ற விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் கொடுப்போம் என்று சொல்லி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது நாடக திமுக…. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் கூட்டுறவு வங்கிகள் பெறப்பட்ட நகைக்கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று தேர்தலுக்கு முன்பாக திமுக பசப்பும் தேர்தல் வாக்குறுதிகளைத் தந்து பல லட்சக்கணக்கான மக்களுக்கு நகை கடன் தள்ளுபடியை வழங்காமல் ஏமாற்றி உள்ளது.

திமுகவின் தோல்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம், மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்திருக்கும் திறனற்ற திமுக அரசு, இனி விவசாயிகளையும் வஞ்சிக்கலாம் என்று நினைத்தால், அதை தமிழக பாஜக ஒருபோதும் அனுமதிக்காது. பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்காகவும், விவசாய பெருங்குடி மக்களுக்காகவும் என்றும் களத்தில் நின்று போராடுவதற்கு தமிழக பாரதிய ஜனதா கட்சி எப்போதும் தயாராக இருக்கிறது.