24 special

சிறைக்கைதிகளின் உரிமையை பறிப்பதா?...திமுகவிற்கு சரமாரி கேள்வி!

mk stalin, edapadi
mk stalin, edapadi

எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடரில் சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைக்கைதிகளை விடுதலை செய்யக் கோரி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 36 இஸ்லாமியர்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளனர். அவர்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று பேரவையில் வலியுறுத்தினார்.இதற்கு பதில் தரும் விதமாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் இருந்தபோது குடியுரிமை திருத்த சட்டத்தை கண்மூடி ஆதரித்த அதிமுக, இப்போது இஸ்லாமிய சிறைவாசிகள் மீது திடீர்பாசம் ஏன் என்று இங்குள்ள அனைவருக்கும் தெரியும் என கூறி இருந்தார். இதனால் அதிமுக பேரவையில் இருந்து வெளியேறியது. தொடர்ந்து எடப்பாடி இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளார். 


தமிழக சிறைகளில் உள்ள இஸ்லாமிய கைதிகள், அவர்களுடைய மதக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு வழிவகுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "சிறைச் சாலைகள் என்பது தவறு செய்பவர்களுக்கு தண்டனை அளிக்கும் இடம் மட்டுமல்ல, அவர்களை நல்வழிப்படுத்தும் இடங்களுமாகும். கடந்த 29 மாத விடியா திமுக ஆட்சியில், சிறைச் சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாவதாக செய்திகள் வருகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, சிறைக் கைதிகளின் வழிபாட்டு உரிமைகள் பறிக்கப்படுவதாக நாளிதழ்களில் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. எந்த மதத்தைச் சார்ந்த சிறைக் கைதியாக இருந்தாலும், ஆண்டாண்டு காலமாக அவர்களுக்கு வழிபாட்டு உரிமைகள் வழங்கப்பட்டு வந்தன.குறிப்பாக வேலூர் மத்திய சிறைச் சாலையில் காலம் காலமாக இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த சிறைவாசிகள், அவர்களுடைய மத நம்பிக்கையின்படி வழிபடுவதற்கு பிரத்யேக இடங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

அ.தி.மு.க. ஆட்சியிலும் இந்த நடைமுறை தொடர்ந்தது.அந்தந்த மத குருமார்கள், பண்டிகை காலங்களில் சிறைக்குள் அனுமதிக்கப்பட்டு சிறப்புப் பிரார்த்தனை செய்து நல் எண்ணங்களை வளர்க்கவும், கைதிகளின் நலனுக்காக பிரார்த்தனை செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. கொரோனா பெருந்தொற்று காலத்தில், சிறைவாசிகளிடையே இந்த வைரஸ் தொற்று பரவக்கூடாது என்பதால், சிறைச் சாலைகளில் உள்ள வழிபாட்டுத் தலங்களுக்கும் தடை ஏற்படுத்தப்பட்டது.தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்தபின்பு, கொரோனா நோய்த் தொற்றுக்குப் பிறகும் ஏதோ ஒரு காரணத்தால் சிறைகளில் மத வழிபாடுகள் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வருகின்றன.குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் வேலூர் (தொரப்பாடி) மத்திய சிறைச் சாலைக்குள் மூன்று வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. அதில்இரண்டு மத வழிபாட்டுத் தலங்களை தற்போது வழிபாட்டுக்கு அனுமதித்து விட்ட சிறை நிர்வாகம், இஸ்லாமிய சிறைவாசிகள் தொழுகை நடத்தும் மசூதியை மட்டும் திறக்காமல் மூடி வைத்துள்ளது. 

இதனால், வேலூர் சிறையில் உள்ள இஸ்லாமிய சிறைவாசிகள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.தி.மு.க. ஆட்சியாளர்கள், சிறைவாசிகள் மத்தியில் மனஉளைச்சலை ஏற்படுத்து வது மிகவும் கண்டிக்கத்தக்க தாகும். எனவே, தமிழக சிறைகளில் உள்ள இஸ்லாமிய கைதிகள், அவர்களுடைய மதக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு வழி வகுக்க வேண்டும் என்று தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன். என்று கூறியுள்ளார்.நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைப்பெற உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமியை தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாநிலதலைவர் சரீப் தலைமையிலான நிர்வாகிகள் சந்தித்து பேசினர். அதில் இருந்தே இருகட்சிகளும் ஒன்று இணைந்து செயல்படும் என்ற பேச்சு அடிபட்டது. தற்போது மேலும் அறிக்கையின் மூலம் அதிமுக அதனை உறுதிப்படுத்தியுள்ளது என்று கூறுகின்றனர்.