24 special

திமுக அரசின் அராஜகத்தை நிறுத்தி கொள்ள வேண்டும்.....கண்டனம் தெரிவித்த அண்ணாமலை!

mk stalin, annamalai
mk stalin, annamalai

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று கல்குவாரி டெண்டர் விண்ணப்பத்தின் போது பாஜக பஞ்சாயத்து தலைவர் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, ரவுடிகளை வைத்து ஆட்சி நடத்துவது நீண்ட காலம் நிலைக்காது என திமுகவுக்கு அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.நேற்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கல்குவாரி ஏலம் நடைபெற இருந்தது.


அதில் திமுக அந்த ஏலத்தை எடுத்து வருவாய் ஈட்ட மும்முரம் காட்டி மற்ற யாரும் டெண்டர் கூறக்கூடாது என்று எண்ணி அடியாட்களை கையோடு கூட்டி வந்தனர். அப்போதுபாஜக பிரமுகரும், கவுல்பாளையம் ஊராட்சி மன்ற தலைவருமான கலைச்செல்வன் விண்ணப்பிக்க வந்தார். அப்போது, திமுக நிர்வாகிகள் அவரை தடுத்து நிறுத்தி விண்ணப்பிக்க கூடாது என்று கட்டளையிட்டதாக கூறப்படுகிறது. இதனை எதிர்த்து பாஜக நிர்வாகிகள் உள்ளே சென்றதால் அங்கு இரு கோஷ்டிகளிடையே வன்முறையாக மாறியது. இதில் பாஜக நிர்வாகிகளை திமுக முக்கிய புள்ளியின் அடியாட்கள் சரமாரியாக தாக்கினார்கள்.

இதற்கிடையில் பஞ்சாயத்து தலைவர் உட்பட அவரது தரப்பினருக்கு போலீஸ் முன்னிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் பெரம்பலுார் தி.மு.க., எம்.எல்.ஏ.,வின் பி.ஏ.,க்கள் உள்ளிட்ட, 300க்கும் மேற்பட்ட தி.மு.க.,வினர், கொலை வெறித் தாக்குதல் நடத்தினர். இந்நிலையில் பாஜக பஞ்சாயத்து தலைவர் மீது தாக்குதல் நடத்தியதற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் கண்டனத்தை தெரிவித்துள்ளார்;

அதாவது, பெரம்பலூர் மாவட்டத்தில் கல்குவாரிகளுக்கு நடைபெற இருந்த ஏலத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்பந்தப்புள்ளி கொடுக்க வந்த பெரம்பலூர் கவுல்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவரும் பாஜக தொழில்துறை பிரிவு மாவட்டத் துணைத் தலைவருமான கலைச்செல்வன் மற்றும் தொழில்துறை பிரிவு மாவட்டத் தலைவரான முருகேசன் ஆகியோரை திமுக ரவுடி கும்பல் தடுத்து நிறுத்தி, அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். 

மேலும், திமுகவினரைத் தடுக்க முயற்சித்த,  கனிம வளத்துறை துணை இயக்குனர் ஜெயபால் மற்றும் உதவி புவியியலாளர் இளங்கோவன், வருவாய் ஆய்வாளர் குமரிஆனந்தன் ஆகிய அரசு அதிகாரிகளையும், பாதுகாப்பு பணியிலிருந்த டிஎஸ்பி பழனிச்சாமி உள்ளிட்ட காவல்துறையினர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.மாவட்ட ஆட்சியர் நேரடியாக வந்து எச்சரிக்கை விடுத்த பிறகும், திமுக ரவுடி கும்பல் அங்கிருந்து கலைந்து செல்லாமல் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அங்கிருந்த செய்தியாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். 

கிராம நிர்வாக அலுவலர், அவரது  அலுவலகத்திலேயே வெட்டிக் கொலை செய்யப்படும் அளவுக்கு ஏற்கனவே தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு மோசமாக இருக்கிறது.  தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே, அரசு அதிகாரிகளுக்குப் பாதுகாப்பில்லாத நிலைமைக்கு, திமுகவினர் கொண்டு வந்துள்ளனர். திமுக ஆட்சியில் தமிழகம் ரவுடிகளின் கூடாரமாக மாறியிருக்கிறது. மாவட்ட ஆட்சியருக்குக் கூட இந்த ரவுடி கும்பல் கட்டுப்படவில்லை என்றால், சாதாரண பொதுமக்களின் நிலைமையை எண்ணிப் பார்க்கவே முடியவில்லை. 

ரவுடிகளை வைத்து ஆட்சி நடத்துவது நீண்ட காலம் நிலைக்காது. பொதுமக்கள் திருப்பி அடித்தால், திமுக ரவுடி கும்பல் முழுவதுமாகக் காணாமல் போக நேரிடும் என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் உணர்ந்திருக்க வேண்டும். உடனடியாக, ஆட்சியர் அலுவலகத்தில் தாக்குதலில் ஈடுபட்ட திமுக ரவுடிகளைக் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன். என்று திமுக அரசை வன்மையாக கண்டித்துள்ளார்.