24 special

தொடர்ந்து எதிர்ப்பை சந்திக்கும் திமுக..! கவலையில் முதல்வர்

Mk Stalin, kalaignar
Mk Stalin, kalaignar

திமுகவின் முன்னாள் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி 2018 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். இவரின் உடல் மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது அதனை தொடர்ந்து அவரது நினைவுச் சின்னமாக பேனாசிலை அமைக்க திமுக முதலில் திட்டம் போட்டது.


ஆட்சியைப் பிடித்ததற்கு பிறகு அந்த திட்டத்தை வகுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது அதன் படி 290 மீட்டர் நிலப்பரப்பிலும், 360 மீட்டர் கடலின் மேலேயும் சிலை அமைக்க இருப்பதாக பல்வேறு தகவல்கள் வெளிவந்தது. மேலும் கருணாநிதியின் நினைவிடத்திலிருந்து பேனா சின்னத்திற்கு செல்வதற்கு 650 மீட்டர் நீளத்தில் கடலின் அலைக்கு மேல் ஆறு மீட்டர் உயரத்தில் இரும்பு பாலம் அமைக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது. மொத்தம் இந்த நினைவுச் சின்னத்தை அமைத்து முடிப்பதற்கு 81 கோடி ரூபாய் தேவைப்படும் என கூறப்பட்டது. 

இந்த திட்டம் பற்றிய தகவல் வெளிவர ஆரம்பித்ததில் இருந்து பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. சுற்றுச்சூழல்  மதிப்பீட்டிற்கான ஆய்வும் இதற்கு ஒப்புதல் அளித்தது போல் எங்கும் செய்திகள் வெளியாகவில்லை. அதற்கு மாறாக பொதுமக்களின் எதிர்ப்புக்கு எந்தவித முக்கியத்துவத்தையும் மத்திய அரசின் மதிப்பீட்டு குழு அளிக்கவில்லை என்று சுற்றுச்சூழல் அமைப்பு விமர்சித்து இருந்தது. 

மேலும் இந்த சின்னத்திற்கு ஆகும் பொருள் செலவுகளும் அதிகமாக இருக்கிறது இந்த திட்டத்தை செயல்படுத்தினாலும் அதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் கடற்கரை பகுதியில் உள்ள மண் அரிப்பு ஏற்படும் என்று சுற்றுச்சூழல் அமைப்புகள் தெரிவித்தனர். அதோடு 80 கோடி ரூபாயில் பேனா வடிவ நினைவு சின்னம் அமைப்பதால் யாருக்கு என்ன லாபம்? மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதற்கு பதிலாக திமுக தன் சொந்த அறக்கட்டளை பணத்தை வைத்து நினைவுச் சின்னத்தை அமைக்கலாமே என்று பாஜக, அதிமுக, தேமுதிக உள்ளிட்ட அனைத்து   எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

குறிப்பாக மெரினா கடற்கரையில் பேனா நினைவுச் சின்னத்தை நிறுவ விடமாட்டேன் இப்பொழுது பேனாச்சின்னம் வைப்பீர்கள் பின்பு கண்ணாடி வைப்பீர்களா? அரசின் காசில் பேனா வைக்கிறேன் ஏன் அவர் பென்சில் வைத்திருந்தார் பென்சில் வைக்கிறேன் என்று கூறுவதெல்லாம் சேட்டை தானே என்று தனது எதிர்ப்பை காரசாரமாக தெரிவித்தார் நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். 

சீமானை தொடர்ந்து பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி, திமுகவினர் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு பணம் இல்லை என்று கூறுகிறார்கள் அப்படி இருக்கும் பொழுது கடலில் 80 கோடியில் பேனா சிலை அமைப்பது வீண் செலவுதானே அந்த பேனாவுக்கு மை நிரப்ப வருடா வருடம் எத்தனை கோடி செலவாகும் என்பதை சொல்லிவிடுங்கள் என்று விமர்சித்திருந்தார். இப்படி பல எதிர்ப்புகளை தாண்டி பேனா சிலைக்கு அனுமதி வேண்டி மத்திய அரசிடம் திமுக அரசு கோரியது. 

மத்திய அரசும் தமிழகம் ஆளும் திமுக அரசின் கோரிக்கையை ஏற்று பேனா சிலைக்கு அனுமதி வழங்கியது. மத்திய அரசு அனுமதி வழங்கி விட்டது என்று வேலைகளை படுஜோராக ஆரம்பித்த திமுக அரசிற்கு விழுந்த பேரிடியாக தற்போது புதிய வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டுள்ளது. 

மதுரையைச் சேர்ந்த கேகே ரமேஷ் என்பவர் மெரினா கடற்கரையில் பேனாச்சின்னம் அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். கடல் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் மண் அரிப்பை தடுக்கவும் மரக்கன்றுகள் நட உத்தரவிட வேண்டும் என்றும் அவர் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். ரமேஷின் இந்த மனுவிற்கு முன்பே மீனவர்கள் தரப்பிலும், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படி பேனா நினைவுச் சின்னத்திற்கும் தடை விதிக்கும் விதமாக சட்ட நடவடிக்கை ஏற்படுத்தப்பட்டு வருவது, திமுக தலைமையை ஆட்சியில் இருந்து நம்மால் இதனை சாதிக்க முடியவில்லையே என்று புலம்ப வைத்துள்ளது.