24 special

என்னது... அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு போக போறாங்களா ? எடப்பாடிக்கு அடுத்த டென்க்ஷன்..!

Annamalai,edappadipalanisamy
Annamalai,edappadipalanisamy

பாஜக கூட்டணியில் இருந்து எடப்பாடி பழனிசாமி வெளியேறவேண்டும் என சில மூத்த அமைச்சர்கள் வெளிப்படையாக பழனிசாமியிடம் கோரிக்கை வைத்துள்ள நிலையில் அதற்கு நேர் மாறாக கொங்கு மண்டலத்தை சேர்ந்த நிர்வாகிகள்


பாஜகவுடன் கூட்டணி வேண்டும் கூட்டணி இல்லை என்றால் கொங்கு மண்டலத்தில் திமுகவை வீழ்த்துவது கடினம் எனவும் கூறி இருக்கின்றனர், இதைவிட ஒரு படி மேலே சென்று பாஜக கூட்டணி இல்லை என்றால் நம் கட்சியை சேர்ந்த கிளை செயலாளர்கள் தொடங்கி ஒன்றிய செயலாளர்கள் வரை ஒரே மாதத்தில் பாஜக பக்கம் தாவி விடுவார்கள் என தெரிவிக்க அதிர்ந்து போயிருக்கிறார் எடப்பாடி.

பழனிசாமியை சந்தித்த, நீலகிரி, கோவை திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல் உள்ளிட்ட கொங்கு மண்டலத்தை சேர்ந்த மாவட்ட செயலர்கள் மற்றும் நிர்வாகிகள் சி.வி.சண்முகத்தின் பேச்சு பா.ஜ.க , கூட்டணிக்கு வேட்டு வைக்கும் வகையில் உள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறியுள்ள தாவது: கடந்த 2021 சட்டசபை தேர்தலில் கொங்கு மண்டலம் தான் அ.தி.மு.க.,வை காப்பாற்றியது. இதற்கு, பா.ஜ.க கூட்டணி முக்கிய காரணம்.

நீலகிரி, கோவை, திருப்பூரில், பா.ஜ.,வுக்கு இரட்டை இலக்கத்தில் ஓட்டு சதவீதம் உள்ளது. கொங்கு மண்டலத்தின் மற்ற பகுதிகளில், பா.ஜ.க வுக்கு கணிசமான ஓட்டு வங்கி உள்ளது. அதுமட்டுல்லாது கொங்கு மண்டலம் முழுதும் பிரதமர் மோடிக்கு பெரும் செல்வாக்கு உள்ளது.

எனவே பா.ஜ.க வுடன் கூட்டணி இல்லாவிட்டால், வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு பெரும் இழப்பு ஏற்படும்.பன்னீர்செல்வ kmம் தயவு இல்லாவிட்டால் தென் மாவட்டங்களிலும் வெற்றி பெறுவது கடினம் எனும் நிலையில் பா.ஜக வுடன் கூட்டணி இல்லை என்றால், அ.தி.மு.க., ஒன்றிய, கிளை நிர்வாகிகளில் பலர் பா.ஜ.,வுக்கு சென்று விடுவர். எனவே, எச்சரிக்கையுடன் முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு கொங்கு மண்டல நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர். ஒரு பக்கம் கள நிலவரம் மறு பக்கம் முன்னாள் அமைச்சர்களின் பாஜக எதிர்ப்பு அழுத்தம் இதை கடந்து என்ன முடிவு எடுப்பது என கடும் அழுத்தத்தில் இருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி.

2024 நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.,வை வீழ்த்த வேண்டுமானால் அ.தி.மு.க., ஒரே கட்சியாக ஒன்றுபட்டு இருக்க வேண்டும்' என பா.ஜ.க மேலிடம் பலமுறை எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர் செல்வம் தரப்பை வலியுறுத்தி வருகிறது.

'எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர்கள் இல்லாத நிலையில்அ.தி.மு.க., பிளவுபட்டிருப்பது, தி.மு.க.,வுக்கு சாதகமாகி விடும்' என அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ., தலைவர்கள் எடுத்துக் கூறியும் தினகரன், பன்னீர்செல்வத்துடன் இணைய பழனிசாமி தொடர்ந்து மறுத்து வருகிறார்.

இப்படி அ.தி.மு.க., -- பா.ஜ.க இடையே முரண்கள் ஏற்பட்டுள்ள நிலையில் '2019 லோக்சபா 2021 சட்டசபை தேர்தலில் பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்ததால் சிறுபான்மையினர் ஓட்டுகள் முழுமையாக தி.மு.க.,வுக்கு சென்று விட்டன.

'இதுவே தோல்விக்கு காரணம். எனவே, பா.ஜ.கவுடன் கூட்டணி வேண்டாம்' என கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம், ஜெயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பழனிசாமியிடம் வலியுறுத்தி வருவதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் கடந்த 17-ல் நெய்வேலியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் 'பா.ஜ.க , அரசு சொல்லும் பணிகளை தன் தலையில் வைத்து தி.மு.க., அரசு செய்கிறது.தமிழகத்தில், பா.ஜ.க வை கடுமையாக விமர்சிக்கின்றனர். ஆனால் டெல்லிக்கு சென்றால் மத்திய அரசிடம் கெஞ்சுகின்றனர். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேர்தலில் தி.மு.க., - பா.ஜ.க கூட்டணி தான் மலரப் போகிறது' என புது புயலை கிளப்பினார் சண்முகம் 

அதற்கு பதிலளித்த தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை 'அ.தி.மு.க.,வின் மூன்றாம் கட்ட தலைவர்கள் பேச்சுக்கு பதிலளிக்க விரும்பவில்லை' என, காட்டமாக கூறினார்.

முனுசாமி, ஜெயகுமார் போன்றவர்களும் அவ்வப்போது பா.ஜ.க,வுக்கு எதிராக பேசி வருகின்றனர்.இந்நிலையில் கள நிலவரம் கொங்கு மண்டலத்தில் பாஜகவிற்கு சாதகமாக இருப்பது  அதிமுக கூட்டணி உடையும் பட்சத்தில் கொங்கு மண்டலத்தை கைப்பற்றி 10 நாடாளுமன்ற தொகுதிகளை வென்று விடலாம் என நினைத்த பழனிசாமி தரப்பு கனவை கனவாக மாற்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.