Tamilnadu

வேரோடு சாய்த்து துவம்சம் செய்து அட்டகாசம் நள்ளிரவில் ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை !

elephant
elephant

வனப்பகுதியில் இருந்து இரைதேடி ஊருக்குள் வனவிலங்குகள் புகுந்து பயிர்களையும், வீடுகளையும் சூறையாடும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. இதனால், கிராம மக்கள் வெளியே வரவே அச்சமடைந்து வருகின்றனர்.  மேலும் விவசாயிகளின் நிலங்களை வனவிலங்குகள் துவம்சம் செய்வதால் பெருத்த நஷ்டங்களை சந்தித்து வருகின்றனர் விவசாயிகள். 


கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள மணியம்பாடி கிராமத்தில் பலா மரங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இந்நிலையில், அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் பலா பழங்களை பறித்து சாப்பிட்டு செல்வதும் விவசாயிகள் பயிரிட்டுள்ள ராகி, பீன்ஸ், முட்டைகோஸ், தக்காளி உள்ளிட்ட விளை பயிர்களை சேதப்படுத்தி செல்வதும் தொடர்கதையாகி வருகிறது.

அந்த வகையில் வனப்பகுதியில் இருந்து இரவு நேரத்தில் வெளியேறும் ஒற்றை காட்டு யானை ஒன்று மணியம்பாடி கிராமத்தில் தொடர்ந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள விளை பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.   கிராமத்துக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை அங்கிருந்த பலாமரத்தில் பழுத்து தொங்கிய பலா பழங்களை சாப்பிட்டு மரங்களை முறித்து வேரோடு சாய்த்து வரும் காட்சிகள் பார்ப்போரை அதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது. இதனால் கிராம மக்கள் கடும் அச்சம் அடைந்தனர். ஒரு கட்டத்தில் அந்த பலா மரத்திலிருந்து பலா பழத்தை காட்டு யானை லாவகமாக பறித்து சாப்பிட்டது. இந்த காட்சிகளை அங்கு நின்ற பொதுமக்கள் டார்ச் லைட் அடித்து தங்களது செல்போன்களில் படம் பிடித்துள்ளனர். 

இது புறம் இருக்க அப்பகுதீயில் உள்ள வாழைத்தோட்டங்களையும் சேதப்படுத்தி வருவதால் தாங்கள் பெருத்த நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இந்த ஒற்றை காட்டு யானை தொடர்ந்து அந்த பகுதியில் சுற்றித்திரிந்து விளை பயிர்களை சேதப்படுத்தி கிராம பொது மக்களை அச்சுறுத்தி வருவதால் அதனை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என வனத்துறையினருக்கு அப்பகுதீ மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.