Tamilnadu

டிஜிபி தெரிவித்த கருத்து வலுக்கும் சந்தேகம் மேற்குவங்கமாக மாறுகிறதா தமிழகம்?

Sailendrababu
Sailendrababu

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்த தகவல் கடும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது, தமிழக ஆளுநர் பயணத்தின் பாதுகாப்பு குறைபாடு கடும் சர்ச்சையை உண்டாக்கிட்டுள்ளது, இந்த சூழலில் ஆளுநர் பயணத்தில் பாதுகாப்பு குறைபாடு இல்லை என்று அறிக்கை வெளியிட்டார் சைலேந்திரபாபு.


அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்ட தகவல்கள் பின்வருமாறு :-தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று காலை 7.50 மணியளவில் சிதம்பரம் அண்ணாமலை நகர் விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்பட்டு 8.30 மணிக்கு கொள்ளிடம் சோதனை சாவடிக்கு வந்தடைந்தார். பின்னர் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் ஆளுநர் தருமபுரம் ஆதீனத்தை சந்திக்க திருக்கடையூர் கோயிலில் இருந்து புறப்பட்டார்.

இந்நிலையில் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிபிஐ (எம்) மாவட்டச் செயலாளர் சீனிவாசன், தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் மகேஷ், மீத்தேன் எதிர்பு குழு ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் உட்பட 73 பேர் மயிலாடுதுறை சாலை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரிக்கு எதிரே வடகரை சாலையில் கையில் கருப்பு கொடிகளுடன் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் அங்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு முன்பு 3 அடுக்கு இரும்பு தடுப்பு பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டன. அதோடு அவர்களை அப்புறப்படுத்த காவல்துறை வாகனங்களும் அங்கே கொண்டு வரப்பட்டன. ஆளுநர் வாகனம் மற்றும் இதர கான்வாய் வாகனங்கள் காலை 9.50 மணிக்கு ஏவிசி கலை மற்றும் அறிவியல் கல்லூரியை கடந்து சென்றது. ஆளுநர் கான்வாய் சென்றபோது, ஆளுநரின் கவனத்தை தங்கள்பால் ஈர்க்க முடியவில்லை என்ற ஆதங்கத்தில் போராட்டக்காரர்கள் காவல்துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஒருசிலர் கையில் ஏந்திய கொடிகளை சாலையை நோக்கி வீசினர். ஆளுநர் கான்வாய் முழுவதும் சென்ற பின்பு காவல் அதிகாரிகள் சென்ற வாகனங்கள் மீது சில கொடிகள் விழுந்தன.உடனடியாக பாதுகாப்புக்கு இருந்த காவலர்கள் கொடிகளை கைப்பற்றி ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் ஏற்றினர். கைது செய்தவர்கள் மீது மயிலாடுதுறை காவல் நிலையத்தில் தகுந்த சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆளுநரின் கான்வாய் மீது கற்கள், கொடிகள் வீசியதாகக் கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுப்புகள் அமைத்து கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர்.

பின்னர் கைது செய்து வாகனங்களில் ஏற்றினர். ஆளுநர் கான்வாய் முற்றிலும் சென்ற நிலையில் அவர்கள் காவலர்களிடம் வாக்குவாதம் செய்து பிளாஸ்டிக் பைப்புகளில் கட்டப்பட்டிருந்த கருப்புக் கொடிகளை வீசி எறிந்தனர் என்பதுதான் உண்மை என அதில் டிஜிபி தெரிவித்துள்ளார்.

ஆனால் டிஜிபி அறிக்கைக்கு மாறாக ஆளுநர் பாதுகாப்பு வாகனங்கள் மீது கருப்பு கொடி வீசிய காட்சிகள் பல்வேறு ஊடகங்களில் வெளியாகி இருக்கிறது மேலும் மிகவும் பாதுகாப்பு தேவை படும் VVIP நிலையில் உள்ள ஆளுநர் பயணத்தின் போது, போராட்டகார்களை ஆளுநர் பயண வழிகளில் அனுமதி அளித்தது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அதே நேரத்தில் காவல்துறையினருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர்களில் எத்தனை நபர்களை காவல்துறை கைது செய்துள்ளது என்ற கேள்வியும் எழுந்துள்ளது, தமிழகம் என்பது பாதுகாப்பு மற்றும் அமைதிக்கு மிகவும் பெயர் பெற்ற மாநிலம் இந்த சூழலில் ஆளுநர் மீதான ஆளும் கட்சியின் தனிப்பட்ட காழ்புணர்ச்சி தமிழகத்தை மற்றொரு மேற்கு வங்கமாக மாற்றி விடுமோ என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.