Tamilnadu

மீண்டும் பழிக்கு பழி இப்போது பசுபதி பாண்டியன் ஆதரவாளர் வெட்டி கொலை !

Karur news
Karur news

தமிழகத்தில் பழிக்கு பழி வாங்கும் சம்பவங்கள் கடந்த சில மாதங்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளன தற்போது மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.


கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள கருப்பத்துரைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி கோபால் (53). இவருக்கு பொன்னுமணி என்ற மனைவியும், தமிழ்பொன்னி, கயல்பொன்னி என இரு மகள்களும். நரேன் கார்த்திக், நரேன் ராஜ் என்ற இரட்டை மகன்களும் உள்ளனர். அகில இந்திய தேவேந்திர குல தலைவர் பசுபதி பாண்டியனின் ஆதரவாளரான இவர் மீது தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொலை வழக்குகள் உள்ளன.

இந்நிலையில் இன்று அதிகாலை வீட்டருகே உள்ள கோபாலுக்குச் சொந்தமான வயல்வெளியில் மர்ம நபர்களால் அவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தகவலறிந்த லாலாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த கோபாலின் உடலை கைப்பற்றி கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் கொலை குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகிறார், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லையில் சில நாட்களுக்கு முன்னர் சுபாஸ் பண்ணையார் வீட்டில் பணிபுரிந்த பெண் ஒருவர் கொலை செய்யபட்டு அவரது தலை தனியாக எடுத்து செல்லப்பட்டு பசுபதி பாண்டியன் படத்தின் கீழ் வீசப்பட்டது, இதையடுத்து தமிழக காவல்துறை மாநிலம் முழுவதும் ரவுடிகளை கைது செய்யும் படலத்தை தொடங்கியது இந்த சூழலில் அதற்கு பழி தீர்க்கும் விதமாக பசுபதி பாண்டியன் ஆதரவாளர் கொலை செய்யபட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

இரண்டு தரப்பிலும் தொடர்ச்சியாக கொலைகள் அரங்கேறுவது பொது மக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தை உண்டாக்கியுள்ளது.