Tamilnadu

இம்மாடியோவ் எத்தா தண்டி பாக்கவே பயமா இருக்கே...முதலையை பிடித்து சென்ற வனத்துறை...

crocodile
crocodile

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே விளைநிலத்தில் புகுந்த ராட்சத முதலையை பார்த்த அப்பகு தி மக்கள் பீதியில் உறைந்து போயினர். தமிழகத்தில் தற்போது கோடைக்காலம் தொடங்கும் முன்னரே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக சரிந்து வருகிறது. 


தற்போது அணையின் நீர்மட்டம் மொத்த கொள்ளளவான 100 அடியில் 63 அடியாக சரிந்துள்ளது.இதனால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மேலும்,பவானி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுவதில்லை. இதனால் வற்றாத ஜீவநதியான பவானி ஆறு வற்றி ஓடை போல் காட்சியளிக்கிறது.

இதனிடையே சிறுமுகை அருகே உள்ள மொக்கை மேடு பகுதியைச்சேர்ந்த தமிழ்ச்செல்வன்  என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வாழை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில்  வழக்கம் போல தனது விவசாய நிலத்தை பார்வையிடுவதற்காக சென்றுள்ளார்.  அப்போது,வாழை மரங்களுக்கு இடையே மரம் போன்ற ஒன்று மாறுபட்ட கோணத்தில் இருப்பதை பார்த்த விவசாயி தமிழ்செல்வன்,  உற்றுப் பார்த்த போது அது சுமார் 12 அடி நீளமுள்ள ராட்சத முதலை என்பது தெரிய வந்தது.  

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோஜ் குமாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். விரைந்து சென்ற வனச்சரகர் மனோஜ் குமார் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று  முதலையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் முதலையை பார்க்க அந்த பகுதி மக்கள் திரண்ட நிலையில் பொதுமக்களை அப்புறப்படுத்தி விட்டு எவ்வித பாதிப்பு ம் இன்றி முதலையை வலையை பயன்படுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.

தற்போது கோடை வெயில் வெளுத்து வாங்கி வருகிறது.இதனால் அணைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. எனவே பவானிசாகர் அனையின் நீர் தேக்க பகுதியில்  இருக்கும் முதலை தண்ணீர் குறைந்து வருவதால் அங்கிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள தமிழ்செல்வனின் தோட்டத்திற்கு வந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர். இருந்தபோதிலும் பகல் நேரம் என்பதால் எந்த வித உயிர்சேதம் இன்றி முதலை பிடிக்கப்பட்ட நிலையில், இரவு நேரங்களில் முதலை இருந்தது தெரியாமல் மக்கள் சென்றால் உயிரிழப்புகள் ஏற்படும் என்றும், எனவே வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்