sports

"விஷ உருண்டை" திருப்தி இல்லை.. எதிர்ப்பை பதிவு செய்த வீரமணி தமிழக அரசை எதிர்க்க துணிந்துவிட்டாரா?

k veeramani
k veeramani

கொரோனா காலத்தில் பள்ளி குழந்தைகளின் படிப்புகள் பாதிக்கபட்டுள்ளது, மாணவர்களின் உயிர்தான் முக்கியம் என்பதால் பெற்றோர்கள் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப முடியாத சூழல் நிலவும் நிலையில் தமிழக பள்ளி கல்வித்துறை இல்லம் தேடி கல்வி என்ற ஒரு புதிய திட்டத்தை அறிமுக படுத்தியது, இதன் மூலம் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று கல்வியை கற்பிக்க முடியும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.


இந்நிலையில் பெற்றோர்கள் இடையே இந்த திட்டத்திற்கு நல்ல வரவேற்பு உண்டான சூழலில், இந்த திட்டம் ஆர் எஸ் எஸ் திட்டம் எனவும் சக்கரை கலந்த விஷ உருண்டை எனவும் இதில் எங்களுக்கு திருப்தி இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார் வீரமணி இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு :-

தமிழ்நாடு அரசு - தி.மு.க. அரசு, குலக்கல்வித் திட்டத்தின் மறுபதிப்பாகவும், சமூகநீதியை அறவே ஒழிக்கும் வகையில் அதுபற்றிய முக்கியத்துவத்தையே தராமலும், ஆர்.எஸ்.எஸ். கொள்கைப்படி உருவாக்கப்பட்ட ஒன்றிய அரசின் கல்வித் திட்டத்தை தமிழ்நாடு ஏற்காது என்று கொள்கை முடிவாக முன்பே அறிவித்துள்ளது.

மிகுந்த வேதனையைத் தருவதாக உள்ளதுஇந்த நிலையில், நமது பள்ளிக் கல்வித் துறை அதனை தெரிந்தோ, தெரியாமலோ ‘பழைய கள் புதிய மொந்தை’ என்பதுபோல் பல தனித்தனி அம்சங்களை நடைமுறைப்படுத்துவது போன்ற சில ஆணைகளைப் பிறப்பித்திருப்பது அறிய முற்போக்குச் சிந்தனையும், மனுதர்ம சனாதனக் கல்வியை ஒட்டகம் நுழைவதுபோல் நுழைய இடம் கொடுத்துவிடக் கூடாது என்று உறுதியாய் உள்ள பலருக்கும் இப்போதுள்ள போக்கு மிகுந்த வேதனையைத் தருவதாக உள்ளது. அதிர்ச்சியாகவும் உள்ளது.

ஆர்.எஸ்.எஸ். பாராட்டும் கல்விக் கொள்கையின் நுழைவே ‘இல்லம் தேடி கல்வித் திட்டம்!’ஆரம்பப் பள்ளி மாணவர்கள் ‘திறனறித் தேர்வு’பற்றி சில நாள்களுக்குமுன் நாம் சுட்டிக்காட்டியிருந்தோம்; அதுபற்றிய விளக்கம் அளித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள், அது சாதாரணமாக மதிப்பெண் போடப்பட்டு தேர்வுக்கு எடுத்துக் கொள்ளப்படாது - அதனால் மாணவர்கள் பாதிக்கப்படமாட்டார்கள் என்ற ஒரு விளக்கத்தைக் கூறினாலும்கூட,

நம்மால் அது கேட்டு திருப்தி அடைய முடியவில்லை. காரணம், அத்திட்டத்தை இயக்குபவர்கள் அதில் சி.பி.எஸ்.இ. என்பது குறிப்பிடப்பட்டு, மறைமுகமாக நமது மாநில உரிமையில் தலையிட்டு அதன்மூலம் கல்விக் கொள்கையில் செயலாக்கவே என்பது விளங்குகிறதே!(சிறு வயதில் தேர்வு என்பது அச்சுறுத்துவது) அதுபோலவே, இப்போது ‘இல்லம் தேடி கல்வித் திட்டம்‘ என்பதும் ஆர்.எஸ்.எஸ். பாராட்டும் அதன் கல்விக் கொள்கையின் நுழைவே ஆகும்.

‘‘கற்றல் - கற்பித்தல் பணியை மேற்கொள்ள ஒவ்வொரு ஊரிலும் உள்ள தன்னார்வத் தொண்டர்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற தேசிய கல்விக் கொள்கை-2020 தெரிவிப்பதைத்தான் அப்படியே நடைமுறைப்படுத்துவதாக இந்த இல்லம் தேடி வரும் கல்வித் திட்டம் அமைந்திருக்கிறது.

இதனை தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் கூறியுள்ளது சுட்டிக்காட்டத்தகுந்தது. சர்க்கரைப் பூச்சுள்ள விஷ (ஆர்.எஸ்.எஸ்.) உருண்டை! ‘‘இல்லம் தேடி கல்வித் திட்டத்தின்படி ஒன்று முதல் 5 ஆம் வகுப்புகளுக்குப் பாடம் கற்பிக்க, பிளஸ் டூ படித்தவர்களையும், 6 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு ஏதாவது ஒரு பட்டம் பெற்றவர்களைப் பயன்படுத்தலாம்‘’ என்று கூறியிருப்பது,

யாரும் இதனைப் பயன்படுத்தி நுழைந்து, பிஞ்சுகளுக்குப் பாடம் என்ற பெயரில், மத நஞ்சுகளைக்கூட விளைவிக்கவே இந்த சர்க்கரைப் பூச்சுள்ள விஷ (ஆர்.எஸ்.எஸ்.) உருண்டை என்றே கூறி முன்பே எதிர்த்தோம். அதற்குத் தமிழ்நாடு கல்வித் துறை தலையாட்டலாமா? ஏற்கெனவே, நவீன குலக்கல்வித் திட்டமான ஒன்றிய அரசின் புதிய கல்வித் திட்டத்தை நிராகரித்த தமிழ்நாடு அரசு,  அதற்கு மாற்றாக தமிழ்நாடு கல்விக் கொள்கையை உருவாக்க ஓர் உயர்நிலை வல்லுநர் குழு அமைக்கப்படும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நிபுணர் குழு விரைவில் அமைக்கப்பட்டு, அதற்கு குறிப்பிட்ட கால அளவீடும்கூட நிர்ணயித்து, அதன் பிறகே பரிந்துரைகளை செயல்படுத்தலாம்.கல்வித் திட்டம் நமது பிள்ளைகள் வருங்கால வளர்ச்சித் திட்டம் என்பதால், இதில் அவசரக்கோலம்; அள்ளித் தெளித்த நிலை தவிர்க்கப்படுதல் அவசியம்.மாநில உரிமைகளைப் பறித்துவிடுவதாக உள்ளது!கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் திரும்பக் கொண்டுவர அனைத்து முயற்சிகளையும் தவக்கமில்லாமல் செய்வது ஒரு தொலைநோக்கு என்றாலும், முத்தமிழ் அறிஞர் கலைஞர் கொண்டு வந்த சமச்சீர் கல்வித் திட்டத்தைப் போன்று, மாநிலத்தின் கல்வி இன்னமும் ஒத்திசைவுப் பட்டியலில்தான் (கன்கரண்ட் லிஸ்ட்) இருக்கிறதே தவிர, ஒன்றிய அரசின் பட்டியலாகி விடவில்லை;

ஆனால், மருத்துவம், கல்வி, கூட்டுறவு, விவசாயம் எல்லாவற்றையும் மாநில ஒத்திசைவுப் பட்டியல்களில் இருந்து எடுத்துவிட்டு, ஒன்றிய அரசு பட்டியலிலேயே சேர்த்து விட்டதைப்போலவே - நாட்டில் கூட்டாட்சி நடைபெறவில்லை - ஒற்றை ஆட்சியே நடைபெறுகிறது என்பது போன்ற ஒரு நடைமுறையை, ஒன்றிய பா.ஜ.க. அரசு இந்தக் கல்வித் திட்டங்கள், மருத்துவ விவசாய கூட்டுறவு சட்டங்கள்மூலம் நாளும் செய்வது யதார்த்தத்தில் மாநில உரிமைகளைப் பறித்துவிடுவதாக உள்ளது!இதில் முதல் பலி, கல்வி, மருத்துவம்; எதில் ‘திராவிட மாடல்’ ஆட்சி சாதனை சரித்திரம் படைத்ததோ, அதனைக் குறி வைக்கும் நிலை.அவசர அவசியமாகும்!

எனவே, உடனடியாக இதுபற்றி தமிழ்நாடு அரசும், நமது முதலமைச்சரும் உரிய அவசர நடவடிக்கைகளை எடுத்து, தமிழ்நாட்டு மாணவர்களை - கல்வியால் அவர்களது எதிர்காலம் ஒளிமயமாக்கிட அத்துணை முயற்சிகளிலும் ஈடுபடவேண்டியது அவசர அவசியமாகும்!அதற்குள் இப்படி விவாதத்திற்குரியவற்றில் ஈடுபடாமல், பள்ளிக் கல்வித் துறை செயல்படுவதும் மிகவும் முக்கியம். முற்போக்காளர்கள், கல்வியாளர்கள், ஆசிரியப் பெருமக்கள், பெற்றோர், சமூகநல ஆர்வலர்கள் ஆகியோரது பொறுப்புமிக்க கவலையைப் போக்கவேண்டியதும் முக்கிய கல்வித் தொண்டாகும் என குறிப்பிட்டுள்ளார்.

அரசுக்கு அறிவுறுத்தல் என்ற பெயரில் தமிழக அரசின் திட்டங்களை எதிர்க்க வீரமணி துணிந்து விட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது? அறிவுரை சொல்ல வேண்டும் என்றால் நேரடியாக அமைச்சர்களை தொடர்பு கொண்டு பேசக்கூடிய இடத்தில் இருக்கிறார் வீரமணி அப்படி இருக்கையில் அறிக்கை என்ற பெயரில் உண்மையில் சர்க்கரை கலந்த விஷ உருண்டையை வைப்பது வீரமணிதான் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஆட்சி பொறுப்பேற்ற 6 மாதத்திற்கு தமிழக பள்ளி கல்வித்துறையின் குறிப்பிட்ட நடவடிக்கை திருப்தியில்லை என சொல்லியிருக்கும் வீரமணி இன்னும் என்னெல்லாம் சொல்ல போகிறாரோ? காலம் தான் பதில் சொல்லும் என்கின்றனர் வீரமணியின் தொடர் அறிக்கையை கவனித்து வரும் நபர்கள். ஒரு வேலை சுப வீரபாண்டியன் தலைமையில் சமூகநீதி குழு அமைத்தது போன்று வீரமணி தலைமையில் எந்த குழுவும் அமைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் இது போன்று கொளுத்தி போடுகிறார் வீரமணி என்ற பதிலடி கொடுத்துள்ளனர் ஆர் எஸ் எஸ் தரப்பு.