Tamilnadu

"குண்டாஸ்" மனநல மருத்துவர் ஷாலினிக்கு எதிராக இந்து முன்னணி எடுத்த நடவடிக்கை !

Dr.Shalini Psychiatrist
Dr.Shalini Psychiatrist

மத ரீதியாக மக்களை பிளவு படுத்த வேண்டும் என மனநல மருத்துவர் ஷாலினி வெளியிட்ட கட்டுரையை தடை செய்யவேண்டும் எனவும், அதனை நீக்கவேண்டும் எனவும் மேலும் ஷாலினியை கைது செய்ய வேண்டும் எனவும் இந்து முன்னணி சார்பில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.


இது குறித்து ஷாலினி குறிப்பிட்ட சர்ச்சை கருத்து பின்வருமாறு :- அதில் பிறப்புகளையும் மேற்கோள்காட்டி பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:- ஒவ்வொரு சமூகமும் ஒவ்வொன்றை புனிதமாக பார்க்கிறது.. அதை எவரும் கேள்வி எழுப்ப முடியாது. பொதுப்படையாக நமது ஊர்களில் ஆண்கள் மூலமாக குழந்தை பிறந்தது என்ற பல கதைகளும் உண்டு.

அது சில புராணங்களில் சொல்லப்படுகிறது. ஆனால் நமக்கு இருக்கிற சங்கடம் என்னவென்றால், பலருக்கு புராணம் என்றால் என்ன? வரலாறு என்றால் என்ன? என்பதற்கான வித்தியாசம் தெரியாததே ஆகும். புராணத்தில் ஒன்று சொல்லப்பட்டால் அது நிஜமாக நடந்ததாகவும், அதுதான் வரலாறு என்றும், அதை தூக்கி வைத்து பேசும் மனநிலை இங்கு உள்ளது. புராணம் என்பது முழுக்க முழுக்க கற்பனைக் கதைதான், ஆதாரத்தோடு இருந்தால்தான் அது வரலாறு,

ஆதாரம் இல்லாத ஒன்று புராணம், அப்படித்தான் சிவ புராணம், கந்த புராணம் போன்ற பல புராணங்கள் உள்ளது. அதில்,  சிவனுடைய நெற்றியிலிருந்து வெளியேறிய  தீப்பொறி அக்னிபகவான் வாங்கி அதைத் தண்ணீரில் போடும்போது அது குழந்தையாக உருவானது என்றும் அதுதான் முருகன் என்றும் சொல்லுகிறார்கள்.

அதேபோல சிவனைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் மன்மதன் வந்தான், சிவனுக்கு மோகம் வந்தது அப்போது சிவனின் மூன்றாவது கண் திறந்தது என்று கூறுவார்கள். மூன்றாவது கண் என்று சொல்வத  ஆண்குறியைத்தான். அதற்கும் கண்ணைப் போன்ற ஒரு அமைப்பு உள்ளது. உண்மையிலேயே அந்த கண் என்பது நெற்றியில் இல்லை. கண் நெற்றியில் இருக்கிறது என்று சொல்லப்பட்டதால் சிவனின் நெற்றியில் அது ஒரு கண்போல வரையப்பட்டுள்ளது.

ஆனால் இதில் நாம் பார்க்க வேண்டியது என்னவென்றால், ஒரு ஆணின் விந்துவில் இருந்து மட்டும் குழந்தை உருவாகாது. இதற்கு ஒரு பெண்ணின் கர்பப்பை கருமுட்டை தேவை. அப்படி என்றால் இந்த புராணங்கள் எல்லாமே பெண்ணின் கர்பப்பை மற்றும் கருத்தரிப்புக்கு பிறப்புக்கு எதிராக உள்ளது. இந்திய புராணங்கள் மட்டும் இப்படி அல்ல, கிரேக்கப் புராணங்களிலும் இதுபோன்ற கதைகள் உண்டு. கிரேக்கர்களின் தலைமை  கடவுள் ஜீயஸ், அவரின் தொடையிலிருந்து ஒரு குழந்தை பிறந்தது அந்தக் குழந்தைதான் டயனசஸ்,  அவன்தான் போதைகளுக்கெல்லாம் ராஜா என்றும் சொல்லப்படுகிறது. 

இதுபோல பல கதைகள் உண்டு. ஒரு பெண்ணால் குழந்தை பிறக்கிறது என்பதை மறைப்பதற்காகவே, மறுப்பதற்காகவே சில சடங்குகள் செய்யப்படுகிறது. அதேபோல பிராமணர்கள் மற்றும் தமிழ் சமணர்கள் பூணூல் போடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அதாவது பெண்ணிடமிருந்து பிறந்த குழந்தை தீட்டு என்றும், அந்தச் தீட்டை கழிப்பதற்காக பூணூல் போடுவதாகவும் கூறுகின்றனர். குழந்தை பிறந்து விட்டதே என அதை கொண்டாட மாட்டார்கள், தீட்டு என்றுதான் சொல்வார்கள், பிறகு அந்த தீட்டை கழித்துதான்  கோவிலுக்கு கொண்டு வருவார்கள்.

ஒரு குழந்தை பிறப்பையே தீட்டு என்று சொல்லுகிற வழக்கம் உண்டு என்றால் இந்த கலாச்சாரத்தில் ஒரு பிறப்பு எப்படி பார்க்கப்படுகிறது என்பதை யோசிக்க வேண்டும். அனைத்துமே பெண்ணின் உடலிலிருந்து குழந்தை வரவில்லை என்பதை  மறுதளிப்பதற்கான ஒரு உத்திதான். சூரியனில் இருந்து வந்தோம், சிவனுடைய நெற்றியில் இருந்து வந்தோம் என்று கூறுவதெல்லாம் இந்த அடிப்படையில்தான், கர்ணன் சூரிய பகவானுக்கு பிறந்தவன் என்று சொல்லப்படுகிறது, இதே போல எகிப்திலும் ஒரு கட்டுக் கதை உள்ளது.இப்படி சொல்ல வேண்டியதன் நோக்கம், அவசியம் என்னவென்றால்,

2 அணிகளுக்கு இடையே போர் நடக்கும் போது, தன் எதிரில் உள்ளவரை விட தான் உயர்ந்தவன் என்ற மனநிலையில் இருக்க வேண்டும் என்பதற்காகவும்,  தான் வேறு எதிரில் இருப்பவன் வேறு என்ற எண்ணம் அவர்களுக்குள் இருக்க வேண்டும் என்பதற்காகவும் தான், அவனைப்போல தாயின் வயிற்றிலிருந்து பிறந்தவன் அல்ல, நான் சூரியனிலிருந்து பிறந்தவன் என்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் இதுபோன்று போதிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களைப் போல சாமானியமாக பெண்ணின் யோனியிலிருந்து பிறக்கவில்லை, நாங்கள் உயர்ந்தவர்கள் என்பதை காட்டுவதற்காகவே இப்படி போதிக்கப்பட்டு இருக்கிறது.

நேராக சூரியனிலிருந்து வந்தாய், குண்டத்தில் இருந்து வந்தாய், அக்னி சட்டியில் இருந்து வந்தாய் என்று கற்பிக்கப்பட்டிருக்கிறது. மனித பிறப்பு என்பதை மறைத்து தாங்கள் ஆன்மீகரீதியாக, தேவத்துவமாகவும் பிறந்தவர்கள் என்பதற்காக இப்படி போதிக்கப்பட்டுள்ளது என சர்ச்சையாக குறிப்பிட்டார்.

இந்த கட்டுரை கடும் சர்ச்சையை உண்டாக்கிய நிலையில் இந்து முன்னணி சார்பில் புகார் கொடுக்கப்பட்டது அதில்,டாக்டர் ஷாலினி மனநல மருத்துவர்  இந்து மதத்தில் நெற்றியில் வைக்கப்படுகின்ற திருநாமம், சிவபெருமானின் நெற்றிக் கண் ஆகியவற்றைப் பற்றி கொச்சையாக, அருவருப்பாக  பேசியுள்ளார்.

அந்த  கட்டுரையை தடைசெய்து சமூக வலைதளங்களில் இருந்து நீக்க  வேண்டும் மற்றும் மத உணர்வை புண்படுத்தி மதரீதியாக கலவரத்தை தூண்ட முயற்சி செய்யும் ஷாலினி மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று கோரி இன்று  சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்து முன்னணி சார்பில் சென்னை மாநகர பொது செயலாளர் தலைமையில் வழக்கறிஞர்கள் உடன் சென்று புகார் அளித்தனர்.