Tamilnadu

கார்த்தி சிதம்பரத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்த "சுபவீ" காரணம் என்ன?

Subavi and karthi chidambaram
Subavi and karthi chidambaram

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்திற்கு சுப வீரபாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார் இது குறித்து அவர் தெரிவித்த கருத்து பின்வருமாறு :-


"இன்று தினமலர் பார்த்தீர்களா? முதல் பக்கத்தில் ஒரு செய்தி உள்ளது" என்று, நான் மிகவும் மதிக்கும்  நண்பர் ஒருவர் காலையில் தொலைபேசியில் கூறினார். பொதுவாக அந்த நாளேட்டினை நான் பார்ப்பதும், படிப்பதும் இல்லை. நண்பர் சொன்னதால் வாங்கிப் பார்த்தேன். அதில் ஒரு செய்தி இருந்தது என்பதை விட, ஓர் அதிர்ச்சி இருந்தது என்பதேஉண்மையானது. 

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு கார்த்திக் சிதம்பரத்தின் அறிக்கை ஒன்று அதில் வெளியாகி இருந்தது. "நீட் தேர்வை உணர்வு ரீதியில் அணுக வேண்டாம்" என்று கார்த்திக் சிதம்பரம் 'அறிவுரை' சொல்லியிருந்தார். உள்ளே " நான் நீட் தேர்வை ஆதரிக்கிறேன்" என்று வெளிப்படையான அறிவிப்பும்  இருந்தது. 

இதற்கு முன்பும் அவர் நீட் தேர்வுக்கு ஆதரவாகச் சில செய்திகளை வெளியிட்டுள்ளார். எனினும், தமிழ்நாடு சட்டமன்றத் தீர்மானத்தை ஆளுநர் திருப்பி அனுப்பியிருக்க, அதனையொட்டி, தமிழ் நாடு அரசு கூட்டிய அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில், மீண்டும் சட்டமன்றம் கூடி அத்தீர்மானத்தை நிறைவேற்றுவது என்று முடிவெடுத்துள்ள இத்தருணத்தில், கார்த்திக் சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கை, தினமலர் மற்றும் பாஜக வினரால் கொண்டாடப்படுகிறது.  நேற்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்,  காங்கிரஸ் கட்சியும் கலந்து கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த மாதம், பொங்கலையொட்டி, கார்த்திக் வெளியிட்டிருந்த ஒரு பதிவும் சிறு விவாதத்தை உருவாக்கியது. அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து சொன்ன அவர், அத்துடன் நிற்காமல், "எனக்குச் சித்திரைதான் புத்தாண்டு" என்று கூறியிருந்தார். அதாவது, திமுக அரசின் நிலைப்பாட்டில் தனக்கு உடன்பாடில்லை என்பதைப்  பொதுவெளியில் அறிவித்திருந்தார். அவருக்கென்று சில தனிப்பட்ட கருத்தட்டுகள் இருக்கலாம். ஆனால் அதனைப் பொதுவெளியில் முன்வைக்கும்போது, எதிர்விளைவு என்னவாக இருக்கும் என்பதையும் அவர் சிந்திக்க வேண்டும். 

தனக்கென்று ஒரு தனிச் சிந்தனை, தனித்துவம் எதுவுமே இருக்கக்கூடாதா, ஒரு கட்சியில் அல்லது ஒரு கூட்டணியில் இருப்பதால், தான் சுயேட்சையாகச் சிந்திக்கவே கூடாதா என்று அவருக்குக் கேட்கத்  தோன்றலாம். தேர்தலில் போட்டியிடும்போதும், எந்தக் கட்சியின் நிழலிலும் இல்லாமல், எந்தக் கூட்டணியின் ஆதரவும் இல்லாமல் சுயேட்சையாகப்  போட்டியிட்டிருந்தால், இப்போது யாரும் கேட்க மாட்டார்கள். கேட்பதற்கு உரிமையும் இல்லை. 

தேர்தலில் வெற்றிபெற எல்லோரது ஆதரவும், உழைப்பும்,  கட்சிப் பின்னணியும், வாக்குகளும் வேண்டும். ஆனால் கருத்துகளை வெளியிடும்போது மட்டும் சுயேட்சையாக இருப்பேன் என்று சொல்வது எப்படிச் சரியாகும்?  எந்த ஒரு கட்சியில் இருந்தாலும், அந்தக் கட்சிக்குக் கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்பது, கட்சி அரசியலின் பால பாடம். ஓர் அடிமட்டத் தொண்டனுக்கே அது புரியும். அதிகம் படித்த மேதாவிகளுக்குப் புரியாதா?  கருத்து சுதந்திரம்தான் தனக்கு முதன்மையானது என்று கருதினால், கட்சி, பதவி போன்றவைகளை விட்டு வெளியில் வந்து தன் கருத்து சுதந்திரத்தை அவர் காப்பாற்றிக் கொள்ளலாம். யாரும் அவரை விரல் நீட்டிப் பேச முடியாது. 

அவருடைய அம்மா திரு நளினி சிதம்பரம் நீட் தேர்வை ஆதரித்து வழக்காடியபோதே சிலர் அது குறித்துப் பேசினர். அதனை நான் ஏற்கவில்லை. அது அவரது தொழில். நாம் தலையிட முடியாது என்றே எனக்குத் தோன்றியது. ஆனால், கார்த்திக் சிதம்பரம் அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் என்பது உங்களின் தொழில் அன்று. கட்சியில் உறுப்பினராக இருக்கும்வரையில் கட்சிக்கு , உள்ளே விவாதிக்கலாமே தவிர, பொதுவெளியில் சொந்தக் கருத்தை வெளியிடுவது அழகன்று. 

சில நாள்களுக்கு முன்புதான், நாடாளுமன்றத்தில், காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி, தமிழ்நாடே கொண்டாடத்தக்க வகையில் உரையாற்றியிருந்தார்.  அவர் உரை தமிழர்களிடம் ஏற்படுத்தியுள்ள மகிழ்வையும், பெருமையையும், நீங்கள் உங்கள்  அறிக்கைகளால் சிதைத்துவிடுவது, உங்கள் தகுதிக்கும், உங்கள் பொறுப்புக்கும், எங்களைப்  போன்றவர்கள் மிகவும் மதிக்கும் உங்கள் தந்தையாரின் அரசியல் அனுபவத்திற்கும்  உகந்ததன்று என குறிப்பிட்டுள்ளார்.

More watch video