Cinema

பருத்திவீரன் படப்பிடிப்பில் நடந்தது இதுதான் இயக்குனர் பொன்வண்ணன் வெளியிட்ட தகவல்!

ponvannan, gnanavel raja
ponvannan, gnanavel raja

கார்த்தி நடிப்பில் அமீர் இயக்கத்தில் உருவான ’பருத்திவீரன்’ திரைப்படம் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியானது கார்த்திக்கு அடையாள படமாக இந்த பருத்திவீரன் அமைந்தது. தற்போது நடைபெற்ற கார்த்தியின் 25வது பட நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தனக்கு அழைப்பு ஏதும் கொடுக்கப்படவில்லை என்று இயக்குனர் அமீர் தெரிவித்திருந்தார். இதற்கு காரணம் பருத்திவீரன் படத்தின் போது தயாரிப்பாளருக்கு நடிகர் சிவா குடும்பத்திற்கும் ஏற்பட்ட பிரச்சனை தான் காரணம் என்று கூறப்பட்டது. இந்த பருத்திவீரன் தொடர்பான விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் நடிகர் கார்த்தி இது குறித்து உண்மையை தெரிவிக்கமால் மௌனம் காத்து வருகிறார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. சுமார் 16 வருடமாக இந்த போரானது முடிவுக்கு வராமல் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


இதுகுறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிடம் கேட்ட போது எண்ணனிடம் அமீர் பணத்தை வாங்கி கொண்டு ஏமாற்றி விட்டார். எனக்கு நஷ்டம் ஏற்பட்டு விட்டது! நாங்கள் அமீரிடம் பருத்திவீரன் படத்தை கொடுங்கள் என்று கேட்கவில்லை அவர் எங்களிடம் 50 லட்சம் கடன் பெற்றார் இதன் காரணமாகவே படத்தை இயக்கினார் என தரக்குறைவாக பேசியதாக கூறபடுகிறது. இதனை கண்ட திரை பிரபலங்கள் அமீருக்கு ஆதரவு கொடுத்து வந்தனர். மேலும் நெடு முன்தினம் கூட அந்த படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த சமுத்திரக்கனி என்ன நடந்தது என்று அறிக்கை மூலம் தெரிவித்து அமீருக்கு ஆதரவு தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று பருத்திவீரன் படத்தில் நடிகை பிரியாமணிக்கு தந்தையாக நடித்த பொன்வண்ணன் இது குறித்து தனது சமூக தளத்தில் கூறியிருப்பது: ‘பருத்தி வீரன்’திரைப்படம் பற்றிய தயாரிப்பாளர் ஞான வேல் அவர்களின் சமீபத்திய ஊடக பேட்டியைப்பார்த்தேன்! அத்திரைப்படத்தில் நடிகனாக மட்டுமல்லாமல் , நான் பல்வேறு நிலைகளில் பங்காற்றியவன் என்ற வகையில் சில விளக்கங்கள் தர கடமைப்பட்டுள்ளேன். அத்திரைப்படம் ஆரம்பித்து முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த  நிலையில், தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு, அடுத்தகட்ட படப்பிடிப்பு தள்ளிப் போய் கொண்டிருந்தது. அதற்கான முழுமையான காரணம் எங்களுக்கு அப்போது தெரியவில்லை. 

அதன்பின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்புகள் தொடங்கிய போது, அமீர் அவர்கள் பொறுப்பேற்று, பல நண்பர்கள், உறவினர்கள் மூலமாக கடன் வாங்கி படப்பிடிப்புக்கான செலவுகளை செய்தார் என்பதை நானறிவேன்! பல் வேறு கட்டங்களாக படப்பிடிப்பு தொடர்ந்தது. ஒவ்வொரு காட்சியமைப்பும் அவருக்கு திருப்தி வரும் வரை பல நாட்கள் எடுத்து கொண்டே இருந்தார். நானும்,உடனிருந்த சமுத்திரகனியும், செலவுகளைச் சுட்டிக்காட்டி பேசிய போதெல்லாம் எங்களை சமாதான்படுத்திவிட்டு, டப்பிங்.. எடிட்டிங் ... ரீரெக்கார்டிங் என எல்லா நிலைகளிலும் சமரசம் செய்து கொள்ளாமல் இதே மன நிலையுடன்தான்  வேலை பார்த்தார். 

பல வருடங்கள் திரைத்துறையில் பயணித்து வந்த எனக்கு அந்த உழைப்பும், அர்பணிப்பும் மதிக்கத்தக்கதாக இருந்தது. இதனால்தான்,பணத்துக்காக தனது ‘’படைப்பிற்கு’’ என்றும் துரோகம் செய்பவரல்ல அமீர் என்பதை நான் அவருடன் தொடர்ந்து பயணித்தவன் என்ற முறையில் உறுதியாக சொல்லமுடியும். படம் வெளியாகி உலக அளவிலும், இந்திய சினிமாவிலும், படைப்பு ரீதியாகவும், தொழில்நுட்பமாகவும், விமர்சனங்களாலும், வசூல் ரீதியாகவும், அதில் பங்குபெற்ற கலைஞர்களுக்கும் கிடைத்த  ‘தேசிய விருது’’ அங்கீகாரங்காளாலும் அது பெற்ற இடமோ உயரியது. படம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே, பொருளாதாரம் சார்ந்து இருவருக்குமிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, வெளியீட்டுக்கு பின்பும் ,திரைத்துறை சார்ந்த பல்வேறு சங்கங்கள் தலையிட்டும் , பிரச்சனை தீர்க்கப்படாமல் இருக்கிற இந்த நிலையில், தயாரிப்பாளர் ஞானவேல் தனது பக்க நியாயத்தை சொல்வதற்கு முழு உரிமையும் உள்ளது. ஆனால் அதில் ஒரு வரைமுறை இருக்க வேண்டும் .

உலகமே அங்கீகரித்த படைப்பையும், அதன் படைப்பாளியையும் உங்களின் தனிப்பட்டகாரணங்களுக்காக. திருடன், வேலைதெரியாதவர்.. என கொச்சைப்படுத்துவது ஏற்புடையதல்ல..! அந்த ஊடக பேட்டிமுழுக்க  உங்களின் உடல்மொழியும், பேச்சுத்திமிரும்,வக்கிரமாக இருந்தது..! தங்கள் தயாரிப்பில் வந்த ‘இருட்டறையில் முரட்டுக்குத்து’ திரைப்படத்தை போன்று அளவுகோலாக வைத்து பருத்திவீரனையும்,அதனது படைப்பாளியையும் எடைபோட்டுவிட்டீர்களோ! வேண்டாம் இந்த தரம் தாழ்ந்த மனநிலை..! இனியும் உங்களுக்கிடையேயான பிரச்சனைகளை அதற்கான பாதையில் நேர்மையாக அணுகி தீர்வு காணுங்கள்.! பருத்திவீரன் ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் அனைவருக்குமிடையே இருந்த நட்பும்,உறவும் மீண்டும் மலரவேண்டும் என்று இயக்குனர் பொன்வண்ணன் தெரிவித்துள்ளார்.